மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென சரிவு.. நீர் இருப்பு வெறும் 10 டிஎம்சிதான்.. மழை வருமா?
சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 37.50 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 10.83 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 4,524 கன அடியாக குறைந்துள்ளது. மழை பெய்தால் மட்டுமே குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியும் சம்பா சாகுபடியை தொடங்க முடியும் என்பது விவசாயிகளின் கவலையாகும்.
குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் நடப்பாண்டு மேட்டூர் அணை நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சரிந்துள்ளது. கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்தும் நீர் தர அம்மாநில அரசு தயாராக இல்லை. போராடினாலும் தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகா அரசு. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீர் தரக்கூடாது என்று கர்நாடகா மாநில விவசாயிகள் பந்த் நடத்துகின்றனர்.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 7,070 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 5,299 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 4,524 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 37.50 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 10.83 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. 5 கண் மதகு வழியாக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குறுவை பயிர் கருகி வரும் நிலையில் அதை காப்பாற்றவே இன்னும் 20 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் இல்லாத காரணத்தால் நடப்பாண்டு சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications