எட்டிப்பார்க்காத காவிரி.. ஒகேனக்கல் அருவியில் குறைந்த நீர்.. 80 அடியாக சரிந்த மேட்டூர் அணை
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு பல மடங்கு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கும் மேல் சரிந்து வருகிறது. மேட்டூர் நீர் மட்டம் 80 அடியாக சரிந்துள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை போக்குகாட்டி வருகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையால் கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் தண்ணீர் வரத்தொடங்கியது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து கொண்டே உள்ளது.

தற்போது ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 400 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 152 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 198 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 200 கனஅடியை கூட எட்டவில்லை.
இந்த நிலையில் இன்று காலை முதல் நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 81.32 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 80.29 அடியாக சரிந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜூன் 30-ம் தேதியன்று மொத்தம் 13,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், நீர்வரத்து தொடர்ந்து குறைந்ததால் இன்று 10,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதற்கு கவலை தெரிவித்துள்ளார். அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை குறுகிய காலத்தில் அதிகாரிகள் குறைத்துள்ளனர். அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டால், திருச்சியில் உள்ள கல்லணைக்கு 4,000 கனஅடி மட்டுமே வருகிறது. இதை அதிகாரிகள் புரிந்து கொண்டு, விவசாயிகளின் நலன் கருதி மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும். சில நாட்களுக்கு குறைந்தபட்சம் 15,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்,'' என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, செப்டம்பர் 15 ஆம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அணையில் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. இதனால் திறக்கப்படும் நீர் 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் எனவும் நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்க மறுக்கிறது. ஜூன், ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரியில் திறந்து விட்டால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். குறுவை சாகுபடிக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைத்தால் மட்டுமே பயிர்கள் தப்பிக்கும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications