பொங்கி வந்த காவிரி.. விநாடிக்கு 6000 கனஅடி நீர் வரத்து.. மேட்டூர் அணை நீர் மட்டம் 62.5 அடி
சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியில் இருந்து 6,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் கடந்த 17 நாட்களாக வினாடிக்கு 200 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 62.50 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.67 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த 17 நாட்களாக விநாடிக்கு 200 கனஅடி நீர் மட்டுமே காவிரி ஆற்றில் வந்து கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் விநாடிக்கு 6000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஓகேனக்கல் பகுதிகளில் நீர் வரத்து இன்றி வறண்டு போய் வெறும் பாறைகள் மட்டுமே காணப்பட்ட நிலையில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications