மேட்டூர் அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து.. வெளியேற்றும் நீரின் அளவு 40,000 கன அடியாக அதிகரிப்பு
சேலம்: கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. எனவே மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 30,000 கனஅடியிலிருந்து 40,000 கனஅடியாக அதிகரித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகாவின் இரண்டு முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணை ஆகியவற்றிக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக இந்த அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. கடந்த 10 நாட்களாக ஒகேனக்கல்லில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் இன்றும் வெள்ளம் அதிகமாக காணப்படுகிறது. எனவே 11வது நாளாக இன்றும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று வரை இந்த பகுதியில் விநாடிக்கு 43,000 கனஅடி என்கிற அளவில் இருந்த நீர் வரத்து இன்று 50,000 கனஅடியாக அதிகரித்திருக்கிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. எனவே அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, விநாடிக்கு 30,000 கனஅடியிலிருந்து, 40,000 கனஅடியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் டெல்டா பாசனத்திற்கு 22,500கனஅடியும், 16 கண் மதகு வழியாக 17,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு வீரியமாக இல்லையென்றாலும் அடுத்தடுத்த நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டிருப்பதால் டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழையின் தீவிரம் மிதமாக இருந்தால் இந்த முறை மகசூல் அதிகமாக இருக்கும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவிதிருக்கின்றனர்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. இதில் மேட்டூர் நீர் திருச்சியில் காவிரி என்றும் கொள்ளிடம் எனவும் இரண்டு ஆறுகளாக பிரிகிறது.
மேட்டூர் அணையின் நீரை நம்பி குறுவை, சம்பா, தாளடி போன்ற பயிர்கள் பயிரிடப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுவாக 10 லட்சம் ஏக்கருக்கும் மேல் சம்பா மற்றும் தாளடி பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை சாகுபடியும் கணிசமான அளவில் நடைபெறுகிறது. சம்பா பருவத்தில் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.47 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கர் என மொத்தம் 10.69 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
ஆனால் மேட்டூர் நீர் கடைமடை வரை சென்று சேர்வதில் சிக்கல் இருப்பதாக புகார்கள் எழுந்திருக்கிறது. கடைமைடை வரை நீர் சென்று சேர்வதற்கு வாய்க்கால்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த பணிகளை சரியாக செய்யவில்லை என்று அதிமுக புகார் எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications