"பால் இலவசமாக விநியோகம்.." பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி சேலத்தில் 2ஆவது நாளாக போராட்டம்
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் 2ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
சேலம்: பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் தொடரும் நிலையில், சேலத்தில் பொதுமக்களுக்குப் பால் இலவசமாக விநியோகம் செய்து போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் அரசு ஆவின் நிறுவனம் மூலம் அரசு பால் விற்பனை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்திவிட்ட போதிலும், ஆவின் பால் விலை குறைவாகவே இருக்கிறது.
இதன் காரணமாகவே ஆவின் பாலை வாங்கப் பொதுமக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், சில காலமாகவே ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு இருப்பதாகப் புகார் எழுந்தது.

பால் உற்பத்தியாளர்கள்
பல இடங்களில் அதிகாலையில் பால் விநியோகம் தொடங்குவதிலும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் எனப் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதாவது பசும்பால் லிட்டருக்கு ரூ 42 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு 51ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது தமிழக பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

போராட்டம்
இது தொடர்பாக அமைச்சர் நாசருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முதல் சில பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆவின் நிறுவனத்திற்குப் பாலை வழங்கவில்லை. இருப்பினும், அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் தூண்டிவிட்டே இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் ஓரிரு பால் சங்கங்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் நாசர் கூறியிருந்தார். இதற்கிடையே ஆவின் தரப்பிலும் தங்களுக்குப் போதியளவில் பால் கிடைத்துள்ளதாகவும் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் கூறியிருந்தார்.

பால் உற்பத்தியாளர் சங்கத்தினர்
இதற்கிடையே இது தொடர்பாகச் சேலத்தில் போராட்டத்தில் ஈடுபடும் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறுகையில், "நேற்றை விடப் போராட்டம் விரிவடைந்துள்ளது. பல சங்கங்கள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளன. அதிகாரிகள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதால் தட்டுப்பாடு இல்லை என்ற பொய்யான தகவலை அரசுக்குத் தருகிறார்கள். பாதிக்கும் மேற்பட்ட சங்கங்கள் பாலை ஆவினுக்கு தர மாட்டோம் என்று நிறுத்தியுள்ளன.

இலவசமாக விநியோகம்
அப்படியிருக்கும் போது, தட்டுப்பாடு ஏற்படாமல் எப்படி இருக்கும். இதுபோல பொய்யான தகவல்களைப் பரப்பி போராட்டத்தைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்" என்றார். இதற்கிடையே சேலத்தில் பொதுமக்களுக்குப் பால் இலவசமாக விநியோகம் செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சேலத்தில் கூட்டுறவுச் சங்கத்தில் பால் வாங்க வந்த பொதுமக்களுக்குப் பால் உற்பத்தியாளர்கள் இலவசமாகப் பாலை வழங்கிய போராட்டம் நடத்தினர்.

கோரிக்கை
இதற்கிடையே ஆவின் பாலுக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும் என்றும் இதனால் அதிக விலை கொடுத்து பொதுமக்கள் தனியார் பால் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் எதிர்க்கட்சியினர் சாடியுள்ளனர். இதன் காரணமாக மேலும், இந்த விவகாரத்தில் முதல்வரே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications