சேலத்தில் மேடை ஏற வந்த அமைச்சர் கே.என்.நேரு! கால் தடுக்கி கீழே விழுந்ததால் பரபரப்பு.. ஏன் என்னாச்சு?
சேலம்: சேலத்தில் கூடைப்பந்து போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அமைச்சர் கே.என்.நேரு தடுமாறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகரில் மகாத்மா காந்தி உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வந்தது.

இந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி விழாவில் அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கவுதம் சிகாமணி, எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இநத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு மேடை ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அருகில் நின்றிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் அவரை உடனடியாக தூக்கிவிட்டனர். இதையடுத்து பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

கீழே விழுந்த போதிலும் நிகழ்ச்சியில் இறுதி வரை கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி புறப்பட்டுச் சென்றுவிட்டார். அது போல் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மக்களவைத் தேர்தலுக்கு தயார்ப்படுத்தும் வகையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இணையலாம். அது தேர்தல் நேரத்தில்தான் தெரியும். திமுகவுக்கு வெற்றியை அளித்து மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வெகுமதி அளிப்பார்கள் என நேரு தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் சிறுவாணி தடுப்பணை விவகாரம் குறித்தும் அவர் பேசினார்.

கோவை மாவட்டத்தில் ரூ 1010.9 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது கேஎன் நேரு பேசுகையில் 1010.9 கோடி ரூபாய் செலவில் சிறுவாணியில் தடுப்பணை கட்டப்படுவது தொடர்பாக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். கேரள அரசுக்கு நாங்களும் இயக்கத்தை சேர்ந்த தோழர்களிடமும் சொல்லியுள்ளோம். சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீர்வழித் துறை அமைச்சர் நீதிமன்றம் செல்ல நடவடிக்கையும் எடுத்து வருகிறார் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications