கெட்டிமேளம் இல்லை! பட்டாடைகள் இல்லை! பொண்ணு மாப்பிள்ளை ரெடி! உதயநிதி தலைமையில் சாதிமறுப்பு திருமணம்
சேலம்: சேலத்தில் திராவிடர் விடுதலை கழகம் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அந்த மாநாட்டு மேடையிலேயே சுயமரியாதை திருமணம் ஒன்றை தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார்.
சேலத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில், ''இது தமிழ்நாடு இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை மாநாடு'' என்ற தலைப்பில் கடந்த 2 நாட்களாக மாநாடு நடைபெற்றது.
மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்கச் சென்ற உதயநிதி ஸ்டாலின், சமூக நீதியின் தலைமையகம் தமிழ்நாடு என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசினார்.

பேசி முடித்து விட்டு மேடையிலிருந்து புறப்படவிருந்த அவருக்கு அவரே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒன்று காத்திருந்தது. மாநாட்டு மேடையிலேயே சாதி மறுப்புத் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க கூடிய வாய்ப்பு உதயநிதியை தேடி வந்தது.
அரியலூரை சேர்ந்த எழிலரசன் -காயத்ரி என்ற ஜோடியின் சாதி மறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணத்தை மணமக்களின் இரு வீட்டார் முன்னிலையில் நடத்தி வைத்த உதயநிதி ஸ்டாலின் மணமக்களை மனமாற வாழ்த்தினார்.
உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்த திருமணங்களிலேயே இந்த திருமணம் சற்று வித்தியாசமானதாக இருந்தது. பட்டாடைகள் இல்லை, உறவினர்கள் கூட்டம் இல்லை, கெட்டிமேளம் இல்லை, கருப்புச் சட்டை அணிந்தவாறு மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தனர்.

சீர்திருத்த திருமணங்களை பொறுத்தவரை 1967-க்கு முன்பு சட்டப்படி - முறைப்படி செல்லுபடியாகாத நிலையில் தான் நடந்திருக்கிறது.
1967 -ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று, அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு தான் சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி தந்தார்.












Click it and Unblock the Notifications