சேலம் திமுக இளைஞரணி மாநாடு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் பொறுப்பாக வந்து நின்ற இன்பநிதி
சேலம்: திமுக இளைஞரணி மாநாடு திடலுக்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். உதயநிதி ஸ்டாலினுடன் அவரது மகன் இன்பநிதியும் மாநாட்டு திடலுக்கு வந்ததோடு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார்.
திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மதியமே சேலம் வந்தடைந்தார். அவருடன் அவரது மகன் இன்பநிதியும் சேலம் வந்தார்.

மாநாட்டு ஏற்பாடுகளை உதயநிதி ஸ்டாலின் பார்த்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த இன்பநிதியும் அதை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த தொண்டர்கள் பொறுப்புடன் தந்தை கூடவே மாநாடு பணிகளை பார்க்க வந்து விட்டாரே எனவும் பேசிக்கொண்டனர். இதற்கிடையே, மாநாட்டு திடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலி வந்தடைந்தார்.
ட்ரோன் ஷோ: சேலம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து திமுக இளைஞரணி மாநாட்டின் சுடரை ஏற்றி வைத்தார். இதேபோல் நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 1,500 பேர் கொண்ட இருசக்கர வாகனப் பேரணியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் பிறகு மாநாட்டு திடலில், 1,500 ட்ரோன்களைக் கொண்டு பிரம்மாண்ட ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. ட்ரோன் ஷோவை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உற்சாகமாக கண்டுகளித்தனர். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிய தொடங்கினர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது: இது தொண்டர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் கேரள செண்டை மேளமும் முழங்கப்பட்டது. இதுதவிர குத்தாட்டமும் அங்கு நடைபெற்றதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். சேலம் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மாநாடு நடைபெறும் பந்தல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் மோப்பு நாயுடன் சென்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றிலும் ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். 5 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்திலும் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications