அண்ணாமலை முடிவுக்கு நயினார் நாகேந்திரன் ரியாக்ஷன்.. அதெல்லாம் சாதாரண மேட்டராம்!
சேலம்: தந்தை உடல்நிலை சரியில்லாததால் தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை கூறியது சாதாரண விஷயம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பு நிரந்தரமானது அல்ல என்று கூறிய நயினார் நாகேந்திரன், அந்தந்த சட்டசபைத் தொகுதியில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யவே இந்த நியமனங்கள் நடந்ததாக கூறி இருக்கிறார்.
அண்மையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனக்கு அளிக்கப்பட்ட தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சிங்காநல்லூர், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், மதுரை தெற்கு, விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்த தொகுதிகளை தேர்தலுக்கு தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அண்ணாமலை விலகல்
ஆனால் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக கோவையில் முகாமிட்டுள்ளேன் என்று கூறினார். இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த விலகலுக்கு பல்வேறு பின் கதைகள் சொல்லப்படுகின்றன.
அதிருப்தியில் அண்ணாமலை?
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிகளை மேற்கொண்ட எனக்கு வெறும் 6 தொகுதிகள் மட்டும் கொடுப்பதா என்ற அதிருப்தியால் பணியில் இருந்து அண்ணாமலை விலகியதாக கூறப்படுகிறது. அதேபோல் டெல்லி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை, எம்பி பதவிக்கு அடிபோடுவதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் செயல்பாடுகளை பாஜக தலைமை வேடிக்கை பார்க்குமா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
நயினார் நாகேந்திரன் பேட்டி
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக பாஜகவில் தேர்தல் பொறுப்பு என்று யாருக்கும் அளிக்கப்படவில்லை. இது தேர்தல் வரைக்கும் ஆய்வுப் பணிகள் மட்டும்தான். மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு சென்று, அங்குள்ள பிரச்சனைகள் சரி செய்ய வேண்டும் என்று நியமனம் செய்யப்பட்டனர்.
சாதாரண விஷயம்
இது நிரந்தரமான பொறுப்பு கிடையாது. அண்ணாமலை தந்தைக்கு உடல்நிலை சரியில்லை.. அப்படிதான் கூறி இருந்தார். அடுத்த முறை அனைத்து இடங்களுக்கும் செல்கிறேன் என்று கூறி இருந்தார். இதுவொரு சாதாரண விஷயம் தான் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை இடையிலான மோதலும் இந்த விலகலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications