பணத்திற்கு அடிமையானவர்கள்.. அதிமுகவை அழிக்க நினைப்பது இவர் தான்.. சீண்டும் டிடிவி தினகரன்!
சேலம்: அதிமுகவை திமுகவோ, பாஜகவோ அழிக்க நினைக்கவில்லை என்றும், சேலத்தைச் சேர்ந்த ஒருவர் தான் அழிக்க நினைப்பதாகவும் அமமுக பொதுச் செயலாலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக சார்பாக ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மூத்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பேசினர். அதில், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக அழியாது என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் இன்று பாஜக அழிக்க நினைக்கிறது, திமுக அழிக்க நினைக்கிறது என்று கூறுகிறார்கள். உண்மையில் சேலத்தை சேர்ந்தவர் தான் அதிமுகவை அழித்து வருகிறார்.
எவ்வளவோ தொண்டர்கள் இருக்கும் கட்சியில், பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தலைமையை கைப்பற்ற நினைக்கிறார். இன்னொருவர் தடுக்க நினைக்கிறார். ஆனால் அதிமுகவில் பொதுச்செயலாளர் என்பவர், தொண்டர்களால் தேர்வு செய்யப்படும். பணத்திற்கும், பதவிக்கும் அடிமையானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள். அதிமுக பொதுக்குழுவிற்கு சென்று உண்மையை உடைத்த ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோரின் துணிச்சல் பாராட்டுக்குரியது. அதிமுக ஃபெயிலியர் ஆகிவிட்டது.
அம்மாவின் கட்சியை மீட்டெடுப்போம்.. ஓபிஎஸ் உடன் அரசியல் ரீதியாக சந்திப்பு இல்லை.. டிடிவி தினகரன்!
நாங்கள் பட்ட அனுபவத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமியை பற்றி தெரிந்துகொண்டே, ஓபிஎஸ் மீண்டும் அவருடன் கைகோர்த்தார். ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் பார்க்கவே பாவமாக இருந்தது. குறுக்கு வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமைப் பதவியை கைப்பற்றப் பார்க்கிறார். ஆனால் அதிமுகவின் சட்டவிதிகள் அப்படி இல்லை.
சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பணத்தால் மட்டுமே மேற்கு மண்டலத்தில் அதிமுகவினர் வெற்றிபெற்றனர். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணத்தால் மட்டுமே வெற்றிபெற முடியாது. அதற்கு செல்வாக்கு தேவை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததன் மூலம் அதிமுக தலைமை சரியில்லை என்பது தெரிந்துவிட்டது. இந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஏமாற்றத்தை சந்தித்தவர்கள் அமமுகவை நோக்கி வருவார்கள்.
அம்மாவின் சிங்கக் குட்டிகள் அமமுகவினர், நேர்மையான முறையில் போராடி அமமுக ஆட்சிக்கு வரும். ஆட்சிக்கு வந்த பின் ஜெயலலிதாவின் ஆட்சியை நாங்கள் தமிழ்நாட்டுக்கு காட்டுவோம். மக்களை ஏமாற்றுவது தான் திராவிடமாடல் என்றால் அது வருத்தமளிக்கிறது. 10 ஆண்டுகளுக்கும் பிறகும் திமுக திருந்தவில்லை என்று விமர்சித்தார்.