சேலம் மேட்டூர் அருகே ஆம்னி பேருந்தில் தீவிபத்து! 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம்! டிரைவருக்கு பாராட்டு
மேட்டூர் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தால் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம்.
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஆம்னி பேருந்து திடீரென தீபிடித்து எரிந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கோவையிலிருந்து பெங்களூர் செல்ல ஆம்னி பேருந்து ஒன்று நேற்று கோவை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை ஓட்டுநர் ராஜன் இயக்கினார். இந்த பேருந்தில் ராஜன் உள்பட 44 பேர் பயணம் செய்தனர்.
மேட்டூரிலிருந்து தருமபுரி செல்லும் சாலையில் மேட்டூர் அருகே புதுச்சாம்பள்ளி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்பக்கத்திலிருந்து லேசான புகை வந்தது. இதை பார்த்ததும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளை பேருந்திலிருந்து உடனே இறங்குமாறு டிரைவர் அறிவுறுத்தினார்.
தாறுமாறாக வந்த ஆம்னி பேருந்து! ஹை வேஸில் அலறல்.. சென்னை-மார்த்தாண்டம் சாலையில் விபத்து.. 2 பேர் பலி
ஆபத்தை உணர்ந்த பயணிகள்
இதையடுத்து ஆபத்தை உணர்ந்த பயணிகள் முண்டியடித்து கொண்டு கதவு வழியாக இறங்க முயற்சித்தனர். ஒரே ஒரு கதவு என்பதால் சிலர் ஜன்னல் கண்ணாடி கதவுகளை உடைத்து கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர். இதைத் தொடர்ந்து பேருந்து முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
உடமைகள் தீக்கிரை
பயணிகள் தங்கள் உடமைகளை விட்டுவிட்டு இறங்கிவிட்டதால் அவை எல்லாம் தீக்கிரையாகின. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கருமலைக் கூடல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து கருமலைக் கூடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முண்டியடித்து இறங்கிய மக்கள்
பயணிகள் பேருந்திலிருந்து முண்டியடித்துக் கொண்டு இறங்கியதில் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 11 பேரும் மேட்டூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவேளை டிரைவர் மட்டும் அலர்ட்டாக இல்லாமல் இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணம் என்ன
இந்த தீவிபத்திற்கான காரணத்தை போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள். அது போல் கார் மெக்கானிக் பணியாளர்களை வரவழைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில்தான் விபத்திற்கான காரணம் என்னவென தெரியும் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் சூதானமாக இருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.