சீன் மாறுதே! பிரதமர் அருகில் ஒதுக்கப்பட்ட இருக்கை.. சேலம் மீட்டிங்கில் பாமக ராமதாஸ் பங்கேற்பது உறுதி
சேலம்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை சேலத்தில் பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த ஆண்டும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பிரதமர் மோடி இன்று ரோட் ஷோ நடத்தியிருக்கிறார்.

இதற்காக இன்று மாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து தமிழக காவல் துறை மற்றும் எஸ்பிஜி பாதுகாப்போடு கோவை சாய்பாபா கோயிலில் இருந்து 2.5 கி.மீ தொலைவுக்கு 'ரோட் ஷோ' நடத்தியிருக்கிறார். பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் வழிநெடுகிலும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று இந்த ரோட் ஷோ நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை சேலத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் இந்த மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் அமமுக, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை பாமக, பாஜவுடனான தனது கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. கூட்டணியில் 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
மேலோட்டமாக பார்த்தால் பாமகவை வளைத்தது, நல்ல முன்னெடுப்பை போன்று தோன்றலாம். ஆனால், தமிழகத்தில் பாமகவுக்கு எங்கு ஓட்டு வங்கி இருக்கிறதோ, அங்கு பாஜகவுக்கு பலம் கிடையாது. பாஜக பலமாக உள்ள தொகுதிகளில் பாமகவுக்கு ஓட்டு வங்கி கிடையாது. எனவே வாக்குகளை ஒன்று சேர்க்க இந்த கூட்டணி பெரிய அளவுக்கு உதவாது. இருப்பினும், பாஜக தமிழ்நாட்டில் தனது கூட்டணி பலத்தை காட்ட பாமக பயன்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதே நேரம் மாநில கட்சி அந்தஸ்தை இழந்திருப்பதாலும், மாம்பழம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாலும் பாஜகவுடன் கூட்டணிக்கு பாமக ஓகே சொல்லியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும். மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிபெற வேண்டும். கடந்த சட்டப்பேரவை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பாமக கடும் தோல்வியடைந்த நிலையில், கட்சியின் சின்னமும், மாநில கட்சி என்கிற அந்தஸ்தும் பறிபோயுள்ளது.
எனவே இதனை சமாளிக்க மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்க பாமக யோசித்திருந்தது. இதற்கேற்றார் போல பாஜகவும் அணுக கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாளை சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடன் டிடிவி தினகரன், ஓபிஎஸ் என கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications