கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு.. கொரோனா பணியிலிருந்து விலக்கு.. சேலம் டீன் சபாஷ் உத்தரவு
சேலம்: கொரோனா பாதிப்பால் மதுரையில் கர்ப்பமாக இருந்த மருத்துவர் உயிரிழந்துள்ள நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா பணியிலிருந்து விலக்கு அளித்து மருத்துவமனை டீன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் மருத்துவராக இருந்த சண்முக பிரியா, கொரோனா காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வந்தார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து வந்தார்.

கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதால் அவர் தடுப்பூசியும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்கக் கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா பணிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்ததுள்ளது.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா பணியிலிருந்து விலக்கு அளித்து மருத்துவமனை டீன் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் வேறு வார்டுகளில் அவர்கள் சிகிச்சை அளிக்க பணியமர்த்தப்படுவார்கள். இதுகுறித்து அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து இருப்பதாக டீன் முருகேசன் தெரிவித்துள்ளார்.
சேலம் மருத்துவமனை டீன் முருகேசனின் இந்த அறிவிப்பு சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் வரவேற்பைப் பெற்று உள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா பணியிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications