சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர்களை அமைச்சராக்கிய பிரதமர் மோடி சமூகநீதி காவலர்- எல்.முருகன்
சேலம்: பிரதமர் நரேந்திர மோடி சமூகநீதி காவலராக திகழ்வதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை மக்கள் அறிய செய்யும் நோக்கில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் 'மக்கள் ஆசி யாத்திரை' எனும் சுற்றுப் பயணத்தை சேலம் மாவட்டத்தில் மேற்கொண்டார்.

சாதாரண குடும்ப பின்னணி
அப்போது நிருபர்களிடம் பேசிய எல்.முருகன் கூறியதாவது:- சமூக நீதியை கடைபிடித்து அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பினை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற 43 மத்திய அமைச்சர்களும் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவரகள். அவர்களை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைக்கும் மரபினை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டு கெட்ட எண்ணத்துடன் நடக்க இயலாமல் செய்துவிட்டனர்.

மோடி சமூகநீதி காவலர்
மத்திய அமைச்சர்களை நோக்கி மக்கள் செல்லாமல் மக்களை நோக்கி மத்திய அமைச்சர்கள் செல்ல வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டதன் அடிப்படையில் நாடு முழுவதும் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற்று வருகிறது. மக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை மத்திய அமைச்சர்கள் கேட்டு அதனை தீர்த்து வைக்கும் பணியை செய்து வருகிறார்கள். தனது அமைச்சரவையில் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் அளித்து சமூகநீதி காவலராக பிரதமர் மோடி திகழ்கிறார்.

தமிழகத்துக்கான திட்டங்கள்
தமிழகத்திற்கு எண்ணிலடங்கா திட்டங்களை பிரதமர் மோடி வழங்கிவருகிறார். ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. உலக அளவில் 55 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. யாரிடமிருந்தும் தடுப்பூசியை வாங்காமல் நமது விஞ்ஞானிகளைக் கொண்டு தடுப்பூசியை கண்டறிந்து தற்போது உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தற்கொலை தடுப்பு
ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வரும் தீபாவளி வரை ரேஷனில் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழகூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது 2014ம் ஆண்டிற்கு முன்னர் விவசாயிகள் தற்கொலை தினந்தோறும் நடந்து வந்தது 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்வது கிடையாது அந்த மோசமான சூழ்நிலை தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் காப்பாற்றப்பட்டு விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகளின் விளை பொருடகளுக்கு உரிய விலை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது . இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications