சேலம் அப்பா பைத்தியம் கோவிலில் வேட்பாளர்களின் ஜாதகங்களை வைத்து குறி கேட்ட புதுச்சேரி ரங்கசாமி
சேலம்: புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி இன்று சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் கோவிலுக்கு வந்து வழிபட்டார். சட்டசபைத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் ஜாதகங்களையும் அப்பா பைத்தியம் சித்தரின் பாதங்களில் வைத்து உத்தரவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் முருக பக்தராக இருந்த என். ரங்கசாமி கடந்த 90ஆம் ஆண்டு அப்பா பைத்தியம் சாமிகளைச் சந்தித்தார். அதன்பின் அவரது தீவிர பக்தராக மாறினார். முக்கிய முடிவுகளுக்கு முன் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு முக்கிய முடிவு எடுப்பார். வீட்டில் உள்ள அவரது படத்தை கும்பிடாமல் எங்கேயும் புறப்பட மாட்டார்.
புதுச்சேரி முதல்வராவதற்கு அப்பா பைத்தியம் சாமிகள்தான் காரணம் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முன்பாக சேலம் வந்த என். ரங்கசாமி யாருடன் கூட்டணி அமைப்பது என்று குறி கேட்டு விட்டு சென்றார்.
அப்பா பைத்தியம்
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார் ரங்கசாமி. இன்றைய தினம் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 16 பேர், அதிமுக வேட்பாளர்கள் 5 பேர் பாஜக வேட்பாளர்கள் 9 என மொத்தம் 30 வேட்பாளர் பட்டியலை அப்பா பைத்தியம் சிலை முன்பாக வைத்து வணங்கினார்.
குறி கேட்ட ரங்கசாமி
வேட்பாளர்கள் அனைவரின் ஜாதகங்களை மூலவரின் பாதத்தில் வைத்து தரிசனம் செய்தார். மூலவரின் வாயில் சுருட்டு வைத்து, காதுகளில் பேசி உத்தரவு வாங்கினார். மூலவர் சன்னதியில் 1-30 மணி முதல் 2-30 மணி வரை தியானத்தில் ஈடுபட்ட அவர் கோவிலை வலம் வந்து கையில் சில காகிதங்களுடன் காரில் புறப்பட்டார்.
100 சதவிகித வெற்றி
செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 100 சதவிகித வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அந்த வெற்றிக்கு, சாமியிடம் வேண்டுகோள் வைத்தேன். வெற்றி பெற்றதும் மீண்டும் வந்து தரிசனம் செய்வேன் என்றார்
அமைச்சரான என். ரங்கசாமி
கடந்த 90ஆம் ஆண்டு முதல் முறையாக தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு ரங்கசாமி தோல்வி அடைந்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அப்பா பைத்தியம் சாமியார் புதுச்சேரி வந்திருந்தார். அவரை முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆசி பெறுவர். அப்போது ரங்கசாமியும் சந்தித்தார். அவரைப் பார்த்த சாமியார், ஓராண்டில் அமைச்சராவாய் என்றார்.
தீவிர பக்தரான என். ரங்கசாமி
91ஆம் ஆண்டு திமுக-ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடைபெற்றது. மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி, வெற்றிபெற்று கூட்டுறவு அமைச்சரானார். அன்று முதல் அப்பா பைத்தியம் சாமி பக்தரானார். கடந்த 2000ஆம் ஆண்டு சாமிகள் ஜீவசமாதி அடைந்தார். அதன் பின்னர் சேலம் சூரமங்கலத்திலுள்ள அவரது சமாதிக்கு செல்ல தொடங்கினார். சிலை முன்பு அமர்ந்து உத்தரவு பெற்ற பிறகே அனைத்து காரியத்தையும் செய்வார். சேலம் அடிக்கடி செல்ல முடியாததால் புதுச்சேரி வீமக்கவுண்டன்பாளையத்தில் கோயில் கட்டியுள்ளார்.
அசைக்க முடியாத நம்பிக்கை
அவரது அலுவலகம், வீடு, கார் என அனைத்து இடங்களிலும் அவரது படம் வைத்திருக்கும் அளவுக்கு தீவிர பக்தராக மாறி விட்டார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சாமி பார்த்துக்குவார் என்பதே இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அதன் காரணமாகவே இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஜாதகத்தை வைத்து வெற்றிக்காக வணங்கியுள்ளார். அப்பா பைத்தியம் சாமிகளின் அருளாசி என். ரங்கசாமிக்கு கிடைக்குமா பார்க்கலாம்.