சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு இப்படியும் ஒரு பெருமையா.. வாழப்பாடி ராம சுகந்தன் பதிவை பாருங்க
சென்னை: சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அழிக்க முடியாத சகாப்தம் என ராம சுகந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) 1935ஆம் ஆண்டு தொடங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தான் மாடர்ன் தியேட்டர்ஸ். தென் இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இது.

இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் ஆண்டுக்கு 3 படங்களையாவது உருவாக்கி கொண்டிருந்தது. முதல் முறையாக கலர் படத்தை தயாரித்த பெருமையும் இந்த மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு. இந்த மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான வசனகர்த்தாவாக முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தார்.
இந்த நிலையில் இந்த தியேட்டரின் உள்புறம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த ஆர்ச் மட்டுமே இடிக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆர்ச் முன்பு கருணாநிதியின் சிலையை வைக்க அரசு முற்படுவதாக தகவல்கள் வந்தன. இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கமும் அளித்திருந்தார்.
சேலத்தில் மாம்பழம் எப்படி பிரபலமோ அது போல் மாடர்ன் தியேட்டர்ஸும் பிரபலம். வெள்ளைக்காரன் காலத்திலேயே நாம் சினிமா துறையில் மைல்கல்லை எட்டினோம். இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் குறித்து வாழப்பாடி ராம சுகந்தன் கூறியுள்ளதை பார்ப்போம்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாடர்ன் தியேட்டர்ஸ். வெறுமனே அது ஒரு சினிமா கம்பெனி அல்ல. சாதனைகளின் சிகரம்.
எல்லாவற்றையும் விட தமிழ்நாட்டிற்கே குறிப்பாக சேலத்தின் மிகப்பெரும் அடையாளம். நாடு சுதந்திரம் அடைவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டது தான் மாடர்ன் தியேட்டர்ஸ்.
நிறுவனரான டி.ஆர்.சுந்தரம் வெளிநாட்டில் படித்தவர் என்பதால் அங்கிருந்தே திரைப்பட நிபுணர்களையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்து தமிழ்நாட்டில் சினிமா வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளம் இட்டவர். 1940-லேயே பேசும் படத்தை முதன் முதலில் உத்தமபுத்திரன் என பி யு சின்னப்பாவை வைத்து இரட்டை வேடம் படத்தை தயாரித்து வெளியிட்டு வியக்க வைத்தது மாடர்ன் தியேட்டர்ஸ்.
மலைப்பிரதேசமான ஏற்காட்டில் இயற்கை வளம் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை தன் ஒவ்வொரு படங்களிலும் தவறாமல் சினிமா மூலம் வெளியுலகிற்கு காட்டியது மாடர்ன் தியேட்டர்ஸ். தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்த பி யு சின்னப்பா, எம்ஜிஆர், கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி, வி.என்.ஜானகி, கலைஞர், சிவாஜி, கண்ணதாசன் என மிகப்பெரிய பிரபலங்களுக்கு ஏணியாக அமைந்ததுதான் மாடர்ன் தியேட்டர்ஸ்.
சேலம் ஏற்காடு சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலில் காலடி படாத திரை உலக நட்சத்திரங்களே அந்நாளில் கிடையாது.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் என்பது டி ஆர் சுந்தரத்தின் அழிக்க முடியாத சாதனை சகாப்தம். சேலம் மக்கள் அனைவருக்குமே உண்டான பொதுவான பெருமைமிகு அடையாள சொத்து. இவ்வாறு ராமசுகந்தன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications