போலீஸ் உங்க வீட்டு வேலைக்காரங்களா சார்.. சேலம் அரசு மருத்துவரிடம் சீறிய போலீஸ்.. பரபரப்பு புகார்
சேலம்: சேலம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறை சில குற்றவாளிகளை ரிமாண்ட் செய்ய வரும்போது, மருத்துவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை தன்னை தாக்கிவிட்டதாக மருத்துவர் புகார் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள வெள்ளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32) . இவர் பீரோ பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிக்கு சென்றபோது, மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காரிப்பட்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக ஏழு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக காவல்துறை அவர்களை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது செந்தில் குமார் என்ற மருத்துவர் பணியில் இருந்துள்ளார். காவல்துறையிடம் பேசிய செந்தில் குமார், பணியில் இப்போது நான் மட்டுமே இருக்கிறேன். எனவே சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
கொலை குற்றவாளிகள் என்பதால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளாக மாறியது.
மஃப்டில ஒரு போலீஸ் கை முட்டியை வைத்து தள்ளுகிறார். ரிமாண்டுக்காக 7 குற்றவாளிகளை அழைத்து வந்தனர். 7 பேர் இருப்பதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு போக சொன்னேன். அவர்கள் மீண்டும் கேட்டதால், இங்கேயே பரிசோதனை செய்ய சொல்லிவிட்டேன். செவிலியர்களும் அதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தோம்.
அப்போது தள்ளிவிட்டு தகராறு செய்கின்றனர். ரொம்ப ஓவராக போகின்றனர் என்றவர் ஒருகட்டத்தில் காவல்துறையை என்ன பாஸ் போலீஸ்காரங்க இப்படி பண்றானுக என்று ஒருமையில் பேசினார். வண்டியை எடுத்து கிளம்பிக் கொண்டே இருங்க என்றும் மருத்துவர் செந்தில் குமார் கூறினார்.
நீங்கள் தள்ளிவிட்ட ரெக்கார்ட் எங்களிடம் இருக்கிறது. போலீஸ்காரங்க என்ன உங்க வீட்டு வேலைக்காரங்களா. சீருடையில் உள்ள காவல்துறையினரை தரக்குறைவாக பேசுகின்றீர்கள். கொலை குற்றவாளிகளை உடனடியாக ரிமாண்ட் செய்வதற்கு மருத்துவ பரிசோதனை செய்ய சொன்னோம். நீங்கள் தான் தள்ளிவிட்டீர்கள். வீடியோ வைத்திருக்கிறோம் என்று காவல்துறை வாக்குவாதம் செய்தது.
இரண்டு தரப்பிலும் வாக்குவாதம் செய்து, அதை வீடியோ பதிவும் செய்தனர். இதனால் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த வீடியோ வைரலாகி மருத்துவர்கள் காவல்துறைக்கும், காவல்துறையினர் மருத்துவருக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த மருத்துவர் செந்தில் குமார், காரிப்பட்டி மற்றும் வாழப்பாடி காவல்துறையினர் உடனடியாக மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட் கேட்டனர். உடனடியாக கொடுக்க முடியாது. 7 பேருக்கு பரிசோதனை செய்ய சற்று தாமதமாகும் என்று கூறி எங்கள் பணியை தொடங்கினோம்.
அப்போது எங்கள் அனுமதி இல்லாமல் சிஐடி போலீஸ் செந்தில் ராஜா என்பவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என கேட்டு போனை வாங்க முயற்சித்தபோது அவர் என்னை தாக்கினார். மற்றொரு காவலரும் தாக்கினார். பணியின்போது காவல்துறை தான் எங்களுக்கு பாதுகாப்பு என நினைத்தேன். ஆனால் காவல்துறை அராஜகம் செய்துள்ளது. என்றார்.












Click it and Unblock the Notifications