நிலம் கையெடுப்பு.. ஆத்தூரில் ஆபரேஷனுக்கு டாக்டரே இல்லயாமே? சேலத்தில் இறங்கியடிக்கும் அதிமுக எடப்பாடி
சேலம்: அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பாததை கண்டித்து இன்று அதாவது டிசம்பர் 23ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேட்டூர் அணை 100 அடியை தாண்டினாலும், ஆத்தூர் வசிஷ்ட நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், ஆத்தூர் நகர மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்குகிறது. சொத்து வரி உயர்வு மற்றும் தாமதக் கட்டணமாக அபராத வரி வசூலிக்கப்படுகிறது.

இடைத்தரகர்கள் :
ஆத்தூர் நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை முறைப்படி ஏலம் விடாமல், இடைத்தரகர்கள் மூலமாக விதிகளுக்கு முரணாக கடையை ஒதுக்கீடு செய்ய முயற்சித்து, ஆத்தூர் நகராட்சிக்கு பண இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆத்தூர் நகரில் அதிகரித்துள்ள கரப்பான் பூச்சி, எலி, கொசு தொல்லைகள், தெரு நாய்களின் தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு என்று திமுக அரசின் மோசமான நிர்வாகத்தால், ஆத்தூர் நகர மக்கள் சொல்லொண்ணா சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எந்தவொரு சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை.
ஆத்தூர்:
60 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தற்போது 18 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், எந்தவொரு அறுவை சிகிச்சையும் நோயாளிகளுக்கு அளிக்கப்படவில்லை. முதுநிலை (M.D.) மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது; 5 டயாலிசிஸ் உபகரணங்கள் இருந்தும் மருத்துவர்கள் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை கடந்த 3 ஆண்டுகளாக உள்ளது.
மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பு இப்பகுதியில் அதிகமாக உள்ளது. ஆனால், அதற்கான மருத்துவர் இல்லை. ஸ்கேன் பார்ப்பதற்கு, மயக்கவியல் துறைக்கு மருத்துவர்கள் ஒருவர்கூட இல்லை. பொதுவாக, எந்தவொரு சிகிச்சைக்குச் சென்றாலும், சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கும் வழிகாட்டி மையமாக மட்டுமே செயல்படும் ஆத்தூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டிக்கிறோம்.
நிலம் கையெடுப்பு:
ஆத்தூர் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஜெயலலிதா அரசில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆத்தூர் ரிங் ரோடு அமைப்பதற்கு முதற்கட்டப் பணிகளாக நில கையெடுப்பு தொடங்கிய நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ஸ்டாலினின் திமுக அரசு இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, சந்து கடை போதைப் பொருட்கள் நடமாட்டம், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு போன்றவைகளை கண்டித்து அதிமுக சேலம் புறநகர் மாவட்டம், ஆத்தூர் நகரக் கழகத்தின் சார்பில், 23.12.2024 - திங்கட்கிழமை காலை 10 மணியளவில், ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டம்:
அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ. செம்மலை தலைமையில், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ் நாடு மாநில் தலைமை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான R. இளங்கோவன், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.P. ஜெயசங்கரன் ஆகியோர் முன்னிலையில், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications