அதே கத்தியில் சவரம் பண்ணுவியா? ஆத்தூர் இளைஞர் மரணம்.. 79 நாட்களாக உடலை வாங்காமல் போராடிய தாய்!
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முத்துவேல் என்ற இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் 79 நாட்களாக அவரின் உடலை வாங்காமல் பெற்றோர் போராடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் ஆத்தூரில் இருக்கும் கிழக்கு ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். 21 வயதான இவர் அங்கு முடிவெட்டும் கடை நடத்தி வந்தார்.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
அந்த பகுதியில் இருக்கும் ஒரே முடிவெட்டும் கடை இது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் 12ம் தேதி இவரின் உடல் அங்கு ஏரி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிணம்
ஏரி ஒன்றில் இவரின் உடல் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் போலீசார் இதில் விசாரணையை நடத்தி வந்தனர். போலீசார் இதை தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த நிலையில் முத்துவேலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது தற்கொலை அல்ல கொலை என்று புகார் அளித்தனர். அப்பகுதியை சேர்ந்த வேறு ஜாதியை சேர்ந்த நபர்கள் சிலர் முத்துவேலை கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார்கள்.
குற்றம்
முத்துவேலின் உறவினர்கள் அளித்த புகாரில், சமீபத்தில் முத்துவேலை வேறு சாதியை சேர்ந்த சிலர் தாக்கினார்கள். பட்டியலின மக்களுக்கு பயன்படுத்திய அதே கத்தி மற்றும் கத்திரிக்கோலை பயன்படுத்தி முடி வெட்டியதாலும், சவரம் செய்ததாலும் அவரை குறிப்பிட்ட ஜாதியினர் தாக்கினார்கள். "அவங்களுக்கும் எங்களுக்கும் ஒரே கத்தியை வச்சு ஷேவ் பண்ணுவியா" என்று கேட்டு அவரை தாக்கி உள்ளனர்.
பிணமாக கிடைத்தார்
இந்த சம்பவத்திற்கு பிறகுதான் சில நாட்கள் கழித்து முத்துவேல் ஏரியில் பிணமாக கண்டு எடுக்கப்பட்டார். அவரின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததாகவும். அவருக்கு நீச்சல் தெரியும். ஏரியில் மூழ்கி அவர் பலியாக வாய்ப்பே இல்லை என்றும் முத்துவேலின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதோடு அவர் உடலை வாங்கவும் மறுப்பு தெரிவித்தனர். இவரின் பெற்றோர் முத்துசாமி - செல்லம்மாள் ஆகியோர் உடலை வாங்காமல் கடந்த 79 நாட்களாக போராடி வந்தனர்.
நீதி
மகனின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இது தற்கொலை அல்ல. ஜாதி படுகொலை என்று கூறி போராட்டம் செய்து வந்தனர். இதனால் முத்துவேலின் உடல் சேலம் அரசு மருத்துவமனை சவ கிடங்கிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. 79 நாட்களாக போராடிய பெற்றோர் நேற்று முத்துவேலின் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர்.
ஆட்சியர்
நேற்று ஆட்சியர் அலுவலகம் முன் போராடிய முத்துவேலின் உறவினர்கள் அங்கு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் முத்துவேலின் பெற்றோரிடம் இது தற்கொலைதான். இருப்பினும் இதில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் என்று கூறிய நிலையில் முத்துவேலின் உடலை வாங்கிக்கொண்டு அவரின் பெற்றோர் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர்.