சேலத்தில் வாகன சோதனை.. எஸ்பி வைத்த பொறியில் சிக்கிய போலீசார்.. மறக்க முடியாத சம்பவம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் சேலம் ஊரகம், ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் போலீசாரை வாகன சோதனையில் ஈடுபடுமாறு மாவட்ட எஸ்பி கவுதம் கோயல் அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் வாகன சோதனையில் சரியாக செயல்படுகிறார்களா என்பதை அறிய பொறி வைத்தார். ஆனால் வாகன சோதனையில் அலட்சியமாக இருந்த சப் இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் பொறியில் சிக்கினார்கள்.. நடந்ததை பார்ப்போம்.
சேலம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக சேலம் ஊரகம், ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய உட்கோட்டங்களில் தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி உள்பட மொத்தம் ஆறு கோட்டங்களைச் சேர்ந்த டிஎஸ்பிக்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தி ஆயுதங்கள் எடுத்து வருபவர்கள், மற்றும் சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து கைது செய்யும்படி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி முதல் நேற்று நள்ளிரவு 1 மணி வரை என மொத்தம் 12 மணி நேரம் சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். போலீசார் சரியாக வாகன சோதனை நடத்துகிறார்களா? என்பதை கண்டறிய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் பொறி வைத்து பிடிக்க புதிய முயற்சியில் இறங்கினார்.
அவர் தனக்கு நம்பத்தகுந்த சிலரிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வாகனங்களில் கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார். அதன்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை அவர்கள் எடுத்து சென்றுள்ளனர். ஆனால் வாகன சோதனையில் போலீசார் அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை . இந்த விவரம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயலுக்கு தெரியவந்தது.
இதையடுத்து வாகன சோதனை பணியில் சரியாக ஈடுபடவில்லை என்ற புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவிதா மற்றும் வீரகனூர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 9 போலீசார் என மொத்தம் 10 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி சேலம் மாவட்ட எஸ்பி கவுதம் கோயல் உத்தரவிட்டார். அத்துடன் அன்று இரவே 10 பேரும் மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் சேலம் மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications