சேலம் டூ சிதம்பரம்.. டிக்கெட் மறு விற்பனை.. கையும் கட்டுமாக பிடிபட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்
சேலம்: அரசு போக்குவரத்துகழகத்தில் சேலத்திலிருந்து சிதம்பரம் சென்ற ஏசி பேருந்தில் பயணிகளுக்கு டிக்கெட்டுகளை மறு விநியோகம் செய்ததாக பிடிபட்ட அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து ஒன்று இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து டவுன் பஸ்ஸை போல் ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் நின்று நின்று சென்றது. பொதுவாக ஏசி பேருந்துகள், பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகள், விரைவு பேருந்துகள் ஆகியன குறிப்பிட்ட ஊர்களில் மட்டுமே நின்று செல்லும்.

ஆனால் இந்த ஏசி பேருந்து கிராமம் கிராமமாக நின்று செல்வதை அடுத்து பயணிகள் டிரைவரிடம் ஏன் டவுன் பஸ் போல் எல்லா ஸ்டாப்பிலும் நின்று செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு டிரைவர் அப்படித்தான் நின்று செல்வேன், எங்க வேண்டுமானாலும் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள் என பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து விருத்தாசலத்தை அடுத்த வடலூர் வந்த போது அங்கு போக்குவரத்து கழகத்தின் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் நின்றிருந்தனர். அவர்கள் பேருந்தை நிறுத்தி ஏறினர். அப்போது கண்டக்டரிடம் இருந்த டிக்கெட்டுகளை சோதனை செய்தனர். அதில் சீரியல் எண்ணை வைத்து சோதித்த போது அவை போக்குவரத்து கழகம் கொடுத்த சீரியல் எண்களுடன் சரிபார்த்த போது வேறு வேறாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிதம்பரத்தில் உள்ள பெரியார் பஸ் டிப்போவில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டுகளை கைப்பற்றினர். பேருந்தில் இருந்த பயணிகளை அவரவர் நிறுத்தங்களில் இறக்கிவிட்டுவிட்டு பின்னர் பேருந்தை காலியாகவே எடுத்துக் கொண்டு சென்றனர்.
பேருந்தை ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றியது, போலி டிக்கெட் விற்பனை செய்தது குறித்து பயணிகளிடம் சாட்சியாக எழுதி வாங்கிக் கொண்டனர். டிக்கெட் மோசடி குறித்து சேலம் போக்குவரத்துக் கழகத்திற்கு தகவல் அளித்தனர். திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அந்த பேருந்தின் ஓட்டுநரையும், நடத்துநர் நேருவையும் துறை ரீதியாக விசாரிக்க சேலம் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், நடத்துநர் நேருவை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அவை போலி டிக்கெட்டுகள் அல்ல என்றும் பயணிகளுக்கு கொடுத்த டிக்கெட்டுகள் மறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications