மனைவியை பிணையாக "தூக்கிய" வங்கி.. அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக..சேலம் வாழப்பாடி ரோடில் பதறிய கணவன்
சேலம்: வெறும் 770 ரூபாய் தவணை பணத்துக்காக, அடுத்தவர் மனைவியை தூக்கி சென்றுள்ளது ஒரு வங்கி.. இப்படி ஒரு அக்கிரமம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது துக்கியம்பாளையம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருகிறார் பிரசாந்த்... இவர் ஒரு கூலித் தொழிலாளியாவார். இவர் தன்னுடைய குடும்ப வறுமை காரணமாக, வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 35 ஆயிரம் ரூபாய் பணம் கடன் வாங்கியிருக்கிறார்.

தவணை பணம்: இந்த 35 ஆயிரம் ரூபாயை, வாரந்தோறும் 770 ரூபாய் வீதம் மொத்தம் 52 வார தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்துவதாக சொல்லி கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது... ஆனால், இந்த கடன் தவணையை செலுத்த காலதாமதம் ஆகிவிட்டதால், வங்கி ஊழியர் சுபா என்பவர் நேரடியாகவே பிரசாத் வீட்டிற்கு கிளம்பி சென்று, கடனை வசூல் செய்யலாம் என்று சென்றிருக்கிறார். ஆனால், அப்போது வீட்டில் பிரசாந்த் இல்லை.
அவரது மனைவி கவுரி சங்கரி மட்டுமே இருந்துள்ளார்.. எனவே, பணத்துக்கு பதிலாக, கவுர் சங்கரியை, வங்கிக்கு அழைத்து வந்துள்ளார் சுபா.... தவணை பணத்தை செலுத்திவிட்டு, கணவர்வந்து உங்களை அழைத்து செல்லட்டும் என வங்கி ஊழியர்கள் கவுரிசங்கரிடம் சொன்னதாக தெரிகிறது.
ரூ.770: இந்த விஷயம் தெரிந்ததுமே பதறிப்போன பிரசாந்த், பேங்குக்கு ஓடினார்.. தவணைப்பணம் 770 ரூபாயை பேங்க்கில் கட்டிவிட்டு தன்னுடைய மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.. எனினும், இந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகாத நிலையில், போலீசுக்கு சென்று புகார் தந்தார் பிரசாந்த்.. இந்த புகாரின் பேரில் போலீசாரும், தனியார் வங்கிக்கு வந்து, வங்கி நிர்வாகத்திடமும் பிரசாந்த்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது எந்த வங்கி? என்ன விதிமுறைகளில் உள்ளது? என்று தெரியவில்லை.. ஆனால், இந்த செய்தி இணையத்திலும் வேகமாக பரவி வருகிறது.. வங்கி கடனை வசூலிப்பதில் பல்வேறு வழிமுறைகள் உள்ள நிலையில், பணத்துக்கு பதிலாக, பெண்ணை அழைத்து வந்து வங்கியில் உட்கார வைப்பது சரியா? என்ற கொந்தளித்து கேட்கிறார்கள் இணையவாசிகள்.
மனித உரிமை மீறல்: இதெல்லாம் மனித உரிமை மீறல்.. எனவே, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி, தவறு செய்த வங்கி ஊழியருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
ஏற்கனவே கந்துவட்டி அட்டகாசத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, இப்போதுதான் தமிழகத்தின் விளிம்பு நிலை மக்கள் ஓரளவு நிம்மதியில் இருக்கிறார்கள்.. இப்போது ஒருசில தனியார் வங்கிகளும் இப்படி "விதிமுறைகளுக்கு" அப்பாற்பட்ட நெருக்கடிகளை தந்தால் வெகுஜன மக்கள் எப்படித்தான் சமாளிப்பார்கள்?? இதற்கும் ஒரு கடிவாளத்தை நம்முடைய அரசு போட்டால் நல்லா இருக்கும்..!!!












Click it and Unblock the Notifications