ஷாக்.. பாமக எம்எல்ஏ மகனின் காதை வெட்டிய சலூன் கடைக்காரர்.. சேலத்தில் பரபரப்பு.. என்ன காரணம்?
சேலம்: சேலம் மேற்கு சட்டசபை தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் எம்எல்ஏவான அருளின் மகனின் காதை சலூன் கடை ஊழியர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சேலம் மேற்கு சட்டசபை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர் அருள். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில் இந்த தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவானார்.

அருள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜேந்திரனை விட 21,499 ஓட்டுகள் வெற்றி பெற்றார். தற்போது எம்எல்ஏவாக இருக்கும் அருள் சேலம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டம் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் தான் அருளுக்கு ரவிதாஸ் என்ற மகன் உள்ளார். இவர் சூரமங்கலம் அருகே உள்ள அழகு நிலையத்துக்கு முடிவெட்ட சென்றார். அங்கு அவருக்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தர்ஷன் ராய் என்பவர் முடி வெட்டியுள்ளார். அப்போது திடீரென்று ரவிதாஸின் காதில் வெட்டு விழுந்தது. காதில் இருந்து ரத்தம் கொட்டியதால் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து உடனடியாக அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது காதில் ஏற்பட்ட காயத்தை டாக்டர்கள் பார்வையிட்டனர். அதன்பிறகு காதில் விழுந்த வெட்டுக்காயத்தை சரிசெய்ய தையல் போட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரவிதாஸின் காதில் 2 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பாக ரவிதாஸ் சார்பில் சூரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் சலூன் கடையில் பணியாற்றி வரும் தர்ஷன் ராயை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது ரவிதாசுக்கு முடி வெட்டும்போது தெரியாமல் காதை வெட்டிவிட்டதாகவும், வேண்டுமென்றே இதனை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்ததோடு, வாடிக்கையாளர்களுக்கு கவனமுடன் முடி வெட்டி, ஷேவிங் செய்ய வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது என கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். சலூன் கடையில் பாமக எம்எல்ஏ அருளின் மகன் ரவி தாஸின் காது வெட்டப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications