சேலத்தில் ஓடும் காரில் பாம்புகள்.. முதலில் வந்த கொம்பன்.. அடுத்து வந்தவனை பார்த்து ஆடிப்போன மக்கள்
சேலம்: சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் சேலம் சின்ன கடைவீதிக்கு ஆம்னி காரில் வந்துள்ளார். காரைடிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார். இவர்கள் காரில் இருந்து இறங்கி மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்கள். பின்னர் அதே காரில் ஏறி வீடு நோக்கி சென்றனர். ஆனால் கார் சென்ற சிறிது நேரத்திலேயே கட்டு விரியன் பாம்பு எட்டி பார்த்தது. இதனால் அதிர்ச்சியில் டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார்.
மழைக்காலங்களில், கடுமையான குளிர்காலங்களில் வாகனங்களுக்குள் பாம்புகள் ஏறி படுத்துக் கொள்கின்றன. குளிரை தாக்குபிடிக்க, கதகதப்பான வெப்பத்தை தேடி வானங்களுக்குள் பாம்புகள் வருகின்றன. நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் கார்கள், இருசக்கர வாகனங்களில் பாம்புகள் ஏறிக்கொள்கின்றன. காரில் சுருண்டு கொள்ளும் பாம்புகள், தங்களுக்கு ஆபத்து என்று தெரியாதவரை எட்டிப்பார்ப்பது இல்லை.. ஆனால் ஏதோ நடக்கிறது என்பதை தாமதமாக உணரும் பாம்புகள், எட்டிப்பார்க்கின்றன. அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கின்றன.

சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் 80 வயதாகும் அய்யனார் வசித்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி. இவர்கள் இருவரும் நேற்று காலை மளிகை பொருட்கள் வாங்குவதற்காக தங்களது ஆம்னி காரில் சேலம் சின்ன கடைவீதிக்கு வந்தனர். காரை அவர்களுடைய டிரைவர் ஓட்டி வந்தார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி உள்ளார்கள். பின்னர் சூரமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அதேகாரில் புறப்பட்டுள்ளார்கள்.
கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் கார் வந்தபோது, காரின் பின்புறம் ஒரு சிறிய பாம்பு வெளியே எட்டி பார்த்திருக்கிறது. இதனை காரில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். மேலும் அவர் வேகமாக அந்த காரை துரத்தி காருக்குள் பாம்பு இருப்பதை கூறி அலர்ட் செய்தார்.
இதனால் காரை ஓட்டி வந்த டிரைவர் அலறியடித்து நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தார். அப்போது காருக்குள் இருந்த வயதான தம்பதி அய்யனார், இந்திராணி ஆகியோர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார்கள். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை பத்திரமாக கீழே இறங்குவதற்கு உதவி செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார் அந்த காரை ஓரமாக நிறுத்தி செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து காருக்குள் பதுங்கி இருந்த கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்தனர். அப்போது காருக்குள் இருந்து மேலும் ஒரு கட்டு வீரியன் பாம்பு வேகமாக வெளியே வந்தது. இதையடுத்து 2 பாம்புகளையும் தீயணைப்பு வீரர்கள் நவீன எந்திரம் மூலம் லாவகமாக பிடித்து அதனை ஏற்காடு வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.












Click it and Unblock the Notifications