ஏற்காடு மலை சூட்கேஸில் வீசப்பட்ட தேனி பெண்.. கோவையில் சம்பவம்.. திருவாரூர் இளைஞர் சிக்கியது எப்படி?
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சூட்கேசில் அடைத்து வீசப்பட்ட பெண் யார் என்பதை விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர். கள்ளக்காதலியை கொன்று கோவையில் இருந்து காரில் உடலை எடுத்து வந்தவர் நண்பருடன் கைதாகி உள்ளார். அவர்கள் எப்படி சிக்கினார்கள்.. போலீசார் துப்பு துலக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த மார்ச் 21ம் தேதி காலையில் 40 அடி பாலம் அருகில் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சூட்கேஸ் ஒன்று ஈக்கள், எறும்புகள் மொய்த்தபடி கிடந்ததை கண்டனர். அதில் யாருடைய உடலோ இருப்பதை உணர்ந்த வனத்துறையினர் உடனடியாக ஏற்காடு போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து ஏற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். சூட்கேசை திறந்து பார்த்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேசுக்குள் கை, கால்கள் மடக்கி வைக்கப்பட்டு இளம்பெண் ஒருவரது உடல் கிடந்தது. அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக இருந்தது. முகம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு கிடந்தது.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் , கைரேகைகளை சேகரித்தார்கள் தொடர்ந்து சூட்கேசுடன் அந்த உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணையில் போலீசார் இறங்கினர். விசாரணையில், பெண்ணின் உடல் இருந்த சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டது உறுதியானது. அந்த சூட்கேசை வாங்கியவர் யார் என்று போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில் சூட்கேஸ் வாங்கிய நபர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (வயது 32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
நட்ராஜிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாயின.இதுபற்றி போலீசார் கூறுகையில், மன்னார்குடி பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜூக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அதே நாட்டில் நட்ராஜ் பணிபுரிந்த பகுதியில் தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த 33 வயதாகும் சுபலட்சுமியும் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். சுபலட்சுமிக்கும் கணவரும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர் கணவரிடம் விவாகரத்து பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் தமிழர்கள் என்ற முறையில் அறிமுகமானவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. அதில் நாளடைவில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்ததுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். வெளிநாட்டில் இவர்களின் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.. ஜாலியாக இருந்துள்ளனர். கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளனர். அதன்பிறகு கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியிருக்கிறார்கள்.
கள்ளக்காதலி சுபலட்சுமி பெயரை நட்ராஜ் கையில் பச்சை குத்தி உள்ளார். கோவையில் கணவன்-மனைவியாக கடந்த ஒரு ஆண்டாக வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள்.
தகராறு எப்படி: இதனிடையே கடந்த மாதம் (பிப்ரவரி) தகராறு ஏற்பட்டுள்ளது. எதற்காக தகராறு என்றால், நட்ராஜ் தன்னுடைய மனைவி ராஜேஸ்வரி பெயரை நெஞ்சில் டாட் டூவாக வரைந்து வைத்திருக்கிறார். இதனை அறிந்த சுபலட்சுமி தன்னுடைய பெயரையும் உடலில் டாட் டூவாக வரையும்படி நட்ராஜிடம் கூறியிருக்கிறார். ஆசைநாயகி கூறி விட்டாளே என்று நட்ராஜும் சுபலட்சுமி பெயரை கையில் 'டாட் டூ' வாக வரைந்திருக்கிறார். மனைவி குழந்தைகளை பார்க்க சொந்த ஊருக்கு சென்ற நட்ராஜ், டாட் டூ வாக கையில் இருந்த சுபலட்சுமி பெயரை அழித்திருக்கிறார். மீண்டும் கோவைக்கு நட்ராஜ் வந்தார்.
அப்போது வீட்டில் தங்கி இருந்த போது கையில் வரைந்து இருந்த தனது பெயரை ஏன் அழித்தீர்கள் என்று கேட்டு சுபலட்சுமி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறின் போது, மழுப்பலான பதிலை நட்ராஜ் கூறி இருக்கிறார். இதனால் தகராறு முற்றி உள்ளது.
பெரிய சூட்கேஸ் : அப்போது ஆத்திரம் அடைந்த நட்ராஜ் அங்கு கிடந்த கம்பியை எடுத்து சுபலட்சுமியை தாக்கி இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே சுபலட்சுமி சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நட்ராஜ், தன்னுடைய நண்பர் கனிவளவனை வீட்டுக்கு அழைத்து நட்ராஜ் நடந்த விவரங்களை கூறியிருக்கிறார். அவர் உதவியுடன் கோவையில் உள்ள ஒரு கடையில் பெரிய சூட்கேஸ் ஒன்றை வாங்கி உள்ளார். அதில் சுபலட்சுமி உடலை அடைத்துள்ளனர்.
பின்னர் வாடகை கார் ஒன்றை இவர்களே எடுத்தனர். டிரைவர் வேண்டாம் என்று கூறி விட்டு நட்ராஜூம், கனிவளவனும் பெண்ணின் உடல் இருந்த சூட்கேசை காரில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்றுள்ளார்கள். அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர். உடலை எங்கு வீசினால் கண்டுபிடிக்க முடியாது என்று இருவரும் திட்டமிட்டனர். அதன்படி காரில் 2 நாட்களாக சுபலட்சுமி உடலுடன் சுற்றி திரிந்துள்ளார்கள்.
ஏற்காடு மலை: அப்போதுதான் ஏற்காடு மலைப்பகுதிக்கு மனைவி, குழந்தைகளுடன் நட்ராஜ் சுற்றுலா வந்தது நினைவுக்கு வந்துள்ளது. அங்கு சென்று சுபலட்சுமி உடலை வீசினால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்துள்ளார். அதன்படி ஏற்காட்டுக்கு வந்துள்ளனர். அன்று இரவு 40 அடி மலைப்பாதை பகுதியில் சுபலட்சுமி உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசி விட்டு சென்றுள்ளார்.
சிக்க வைத்த சூட்கேஸ்: போலீசுக்கு பயந்து ஒரு வாரம் சொந்த ஊரான மன்னார்குடியில் இருந்த நட்ராஜ் அதன்பிறகு கோவையில் சுபலட்சுமியுடன் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வந்ததும், அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடையில் வாங்கிய சுட்கேஷ் காரணமாக இருவரும் சிக்கியுள்ளார்கள். கொலை செய்த குற்றச்சாட்டில் நட்ராஜ், கொலையை மறைத்து தடையங்களை அழிக்க உதவிய குற்றச்சாட்டில் அவருடைய நண்பர் கனிவளவன் இருவரையும் கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications