சேலம் எடப்பாடியில் எக்குத்தப்பாக சிக்கிய டிரைவர்.. இறுதியில் கலெக்டர் ஆபீஸில் கைதான தாசில்தார்
சேலம்: சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் என்ற விவசாயி, தனது விவசாய நிலத்தின் பேரில் வங்கி கடன் பெறுவதற்காக தடையில்லா சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு ஆய்வு செய்த தாசில்தார், தடையில்லா சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்தில் தாசில்தார், டிரைவர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி ஊராட்சி மூலப்பாதை பகுதியை சேர்ந்த 55 வயதாகும் தமிழரசன் என்ற விவசாயி குடும்பத்துடன் வசித்து வருகிறார். விவசாயி தமிழரசனுக்கு சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலம் கொங்கணாபுரம் பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் திருச்செங்கோடு-ஓமலூர் இடையிலான 4 வழிச்சாலை அருகே இருக்கிறது.

விவசாயி தமிழரசன் தனது விவசாய நிலத்தின் பேரில் வங்கி கடன் பெறுவதற்கு விரும்பியுள்ளார். அதற்கு பொதுவாக தடையில்லா சான்றிதழ் அரசிடம் வாங்க வேண்டும். அந்த தடையில்லா சான்று கேட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 4 வழிச்சாலைக்கான நில எடுப்பு அலுவலக தனி தாசில்தார் கோவிந்தராஜ் (47) என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார்.
அங்கு தாசில்தார் கோவிந்தராஜ் தடையில்லா சான்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வளவு பணம் தர வாய்ப்பு இல்லை என்று விவசாயி தமிழரசன் கூறினாராம். இறுதியாக ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்றும் மேலும் லஞ்ச பணத்தை ஜீப் டிரைவர் வெங்கடாஜலம் (50) என்பவரிடம் கொடுக்க வேண்டும் என்று தாசில்தார் கூறினாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையம் சென்றார் இங்கு நடந்த விவரங்களை கூறி விவசாயி தமிழரசன் தாசில்தார் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து வழக்கமான நடைமுறைப்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை தமிழரசனிடம் கொடுத்து அனுப்பினர்.
பணத்தை பெற்றுக்கொண்ட விவசாயி தமிழரசன், எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் இருந்த ஜீப் டிரைவர் வெங்கடாஜலத்திடம் ரூ.5 ஆயிரத்தை நேற்று கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார் லஞ்ச பணத்துடன் டிரைவர் வெங்கடாஜலத்தை கைது செய்தனர்.
பின்னர் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நிலம் எடுப்பு தாலுகா அலுவலகத்தில் இருந்த தாசில்தார் கோவிந்தராஜை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகம் மற்றும் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications