எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ்
சேலம்: தமிழ்நாட்டில் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றான எடப்பாடியில் தொகுதியில் இப்போது அதிமுகவுக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அங்குக் கூட்டணிக் கட்சிகளான அமமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தங்களை மதிப்பதே இல்லை என அமமுகவினர் போர்க்கொடி தூக்கியிருப்பது சேலம் அரசியலின் இப்போதைய ஹாட் டாபிக் ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இரு வாரங்கள் கூட இல்லாத நிலையில், பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் களத்தில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, ஐகேஜ, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த கூட்டணியில் இருந்து தான் இப்போது சலசலப்பு குரல் கேட்க ஆரம்பித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இதில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் எடப்பாடி தொகுதியில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 8-வது முறையாகக் களம் காண்கிறார். கடந்த 2011, 2016, 2021 எனத் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி அடைந்த ஈபிஎஸ், இந்த முறையும் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யத் தீயாய் வேலை பார்த்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒரே முகமாக இருக்கிறார். அவர் மாநிலம் முழுக்க தீவிர பிரச்சாரம் செய்து, அதிமுகவுக்காக வாக்கு சேர்த்து வருகிறார். இந்த பிரச்சாரம் காரணமாக அவரால் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரம் செய்ய முடிவதில்லை. அங்கு அவரது கட்சி நிர்வாகிகளே இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் அதிமுகவினர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
அமமுக
கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தேர்தல் பணிகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஈடுபட வேண்டும். எல்லாக் கட்சியினரையும் அதிமுகவினர் உள்ளடக்கிச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால், எடப்பாடி தொகுதியில் அதிமுகவினர் தங்களைத் துளியும் கண்டுகொள்வதில்லை என்பது அமமுகவினரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.. தேர்தல் பிரசாரம், பூத் கமிட்டி என எதிலுமே தங்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்று புலம்புகிறார்கள் அமமுகவினர்.
குமுறும் தொண்டர்கள்
மரியாதைக்குக் கூட தங்களிடம் எந்தவொரு விஷயத்தையும் கலந்து ஆலோசிப்பதில்லை என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கடுப்பில் உள்ளனர். தேர்தல் களத்தில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் அதிமுகவினர் தன்னிச்சையாகவும் ஆணவ மனப்பான்மையுடன் நடப்பதாகவும் அவர்கள் குமுறுகின்றனர். அமமுகவினரை இன்னும் வேதனைப்பட வைத்தது அதிமுகவினரின் ஒரு கமெண்ட் தான். அதாவது "எடப்பாடி தொகுதியில் அமமுக என்று ஒரு கட்சியே இல்லை" என அதிமுகவினர் பேசுவது தங்களுக்கு வேதனையை ஏற்படுத்துவதாக அவர்கள் புலம்பித் தள்ளுகிறார்கள்.
தீருமா?
ஈபிஎஸ் போட்டியிடும் விஐபி தொகுதியிலேயே கூட்டணிக் கட்சிகளிடையே இப்படி ஒரு உரசல் நடப்பது, பேசுபொருளாக மாறியுள்ளது. எடப்பாடி தொகுதியில் இரட்டை இலை வெல்வது உறுதி என்றாலும் இதுபோன்ற பேச்சுகள் கூட்டணி இமேஜை பாதிக்கும். எடப்பாடி தொகுதியில் அமமுகவினர் வெளிப்படையாகக் குமுறிவிட்டனர். இன்னும் பல தொகுதிகளிலும் இந்த சலசலப்பு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
வெள்ளை வேட்டி.. இயல்பான பேச்சு.. இதெல்லாம் ஈபிஎஸ் ஸ்டைல் ஓகே..! ஆனால், கூட இருக்கிற 'குக்கரை' சரியாக மேனேஜ் செய்யவில்லை என்றால் அது ரிசல்ட்ல 'விசில்' அடிச்சிடுமோன்னு ரத்தத்தின் ரத்தங்கள் கவலையில இருக்காங்க!












Click it and Unblock the Notifications