ஆஹா அருமை.. மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு
சேலம்: மத்திய பட்ஜெட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் நிருபர்களிடம் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் இதுபற்றி கூறியதாவது:
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ஓய்வூதியம் அளிக்கும் திட்டங்கள் வரவேற்கத்தக்கது. வருமானவரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மாத வருவாய் தாரர்களுக்கு பலன் தரும்.
தமிழகத்தில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. டெல்டா மாவட்ட மக்களுக்கு சம்பா தொகுப்பு திட்டம், நடவு மானியம் போன்றவற்றை அளிக்கிறோம். மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களின் நிலை அறிந்துதான், கடன் தள்ளுபடி பற்றி அறிவிக்க முடியும். நான் தமிழகத்தின் நிலை பற்றிதான் பேச முடியும் என்றார்.
இது தேர்தலுக்கான பட்ஜெட் என கூறுகிறார்களே என்ற நிருபர்கள் கேள்விக்கு, எதையுமே அறிவிக்காவிட்டால், உப்பு சப்பு இல்லாத பட்ஜெட் என்கிறீர்கள். ஆனால், அறிவிப்பு வெளியிட்டால் தேர்தல் அறிவிப்பு என்கிறீர்கள். ஒரு அரசு என்பது மக்களுக்கு நல்லது செய்வதற்காக உள்ள அரசுதான். எனவே மத்திய அரசு வெளியிட்ட மக்கள் நலத் திட்டங்களை வரவேற்கத்தான் வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிிவித்தார்.