"கள்ளக்குறிச்சி விவகாரம்.. மாணவர்கள் வேறு பள்ளிகளில் படிக்க உடனடி ஏற்பாடு!" அமைச்சர் அன்பில் மகேஷ்
சேலம்: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளியில் படித்த இதர மாணவர்கள் கல்வியைக் காக்க முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் சேலம் சென்று இருந்தார். சேலம் அஸ்தம்பட்டியில் அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சேலம் வந்து இருந்தார்
அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்தும், ஆசிரியர்கள் நியமனங்கள் குறித்தும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.

அன்பில் மகேஷ்
செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், "சேலம் ஏற்காடு அருகே இருக்கும் புளியங்குடி என்ற கிராமத்தில் தொடக்கப் பள்ளிக் கட்டிடம் பழுதடைந்து இருப்பதாகப் புகார் வந்தது. இது தொடர்பாக உடனடியாக பள்ளிக்கே நேரில் சென்று ஆய்வு செய்தேன். அந்த கட்டிடத்திற்குப் பதிலாக புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்குத் தேவையான நிதியும் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்படி மாநிலத்தில் பழுதாக உள்ள 10,031 பள்ளிகளைப் புதுப்பிக்க மட்டும் இந்த ஆண்டு 1300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சியில் வன்முறை காரணமாக அங்குப் படித்த மற்ற மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்போது ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 81% மாணவர்கள் ஏற்கனவே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கத் தொடங்கிவிட்டனர். மேலும், மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்கவும் அருகே இருக்கும் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மாற்றி பள்ளிகள்
மேலும், சம்மந்தப்பட்ட பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் அருகே இருக்கும் மாற்றுப் பள்ளிகளில் படிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை 907 பேர் விண்ணப்பம் வழங்கி உள்ளனர். இதற்காகத் தனியாக DEO நியமிக்கப்பட்டு உள்ளார். மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை மேம்படுத்தத் தனியாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மன அழுத்தம்
இதற்கு முன்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாணவர்களை மருத்துவர்கள் சந்திப்பார்கள். அதை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என மாற்றி உள்ளோம். மேலும், அழுத்தத்தைக் குறைக்கக் குழந்தைகளுக்குப் பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கான திரைப்படத்தைத் திரையிடவும் ஏற்பாடு செய்து உள்ளோம். மேலும், பாரம்பரிய விளையாட்டுகளும் மாணவர்களுக்கு கற்றுத் தர இருக்கிறோம்.
Recommended Video

10,300 ஆசிரியர்கள்
அடுத்த 5 ஆண்டுகளில் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய கட்டமைப்புகள் உருவாக்க உள்ளோம். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இப்போது அதிகரித்து உள்ளது. இதனால் ஆசிரியர் தேவை அதிகரித்து உள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்ய ஏதுவாக நடப்பாண்டில் மட்டும் 10,300 ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications