எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் தமிமுன் அன்சாரி! அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி?
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது சேலம் இல்லத்தில் இன்று சந்தித்து பேசுகிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக கழற்றிவிடப்பட்ட நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இதனால் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இழந்த சிறுபான்மையினர் ஓட்டுக்களை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வருவதில் மிகத் தீவிரமாக உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில் மிகத் தீவிரமாக களமாடி வருகிறார் தமிமுன் அன்சாரி. இதற்காக வேல்முருகன், திருமாவளவன், டி.ராஜா, கே.பாலைருஷ்ணன், அமைச்சர் ரகுபதி என பலரையும் நேரில் சந்தித்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது சிறப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி வருகிறார்.
அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து இது பற்றி முறையிட்டு கோரிக்கை விடுக்க 2 முறை நேரம் கேட்டிருக்கிறார் தமிமுன் அன்சாரி. ஆனால் முதலமைச்சர் தரப்பிலிருந்து தமிமுன் அன்சாரிக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்த நினைத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு தமிமுன் அன்சாரிக்கு நேரம் கொடுத்து சேலம் இல்லத்திற்கு வரச் சொல்லியுள்ளது.
ஏற்கனவே தமிமுன் அன்சாரிக்கு வலைவிரிக்கும் அதிமுக என்று நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்றைய தினம் கூட்டணி பற்றி பேசவும் அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கபடுகிறது. இது பற்றி மஜக வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, அதிமுக கூட்டணியில் மஜக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புவது உண்மை தான். ஆனால் இன்றைய தினம் கூட்டணி பற்றி பேச வாய்ப்பில்லை.
இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டசபையில் பேச வலியுறுத்தியே எடப்பாடி பழனிசாமியை தமிமுன் அன்சாரி சந்திக்கிறார் என்றும் வரும் டிசம்பர் மாதமே கூட்டணி பற்றி நாங்கள் முடிவெடுப்போம் எனவும் தெரிவித்தார்கள்.
தமிமுன் அன்சாரிக்கு எம்.எல்.ஏ. என்ற அடையாளத்தை பெற்றுக்கொடுத்த கட்சி அதிமுக என்பதும் அதற்கு முழுக் காரணம் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications