தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி.. ஜாதி, மதத்திற்கு இடமில்லை.. அமைச்சர் பொன்முடி உறுதி!
சேலம்: தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதால், தமிழகத்தில் ஜாதி, மதத்திற்கு இடம் இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவது இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
வழக்கம்போல ஆரம்பிச்சிட்டீங்களா? 'திராவிட ஸ்டிக்கர்'.. கூவுறீங்களே தவிர.. திமுகவை விளாசும் அண்ணாமலை!
சேலத்தில் காலை உணவு திட்டம்
சேலம் மாநகராட்சி பகுதிகளில், முதற்கட்டமாக 54 தொடக்கப் பள்ளிகளில் இன்று காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, சேலம் மணக்காடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்தத் திட்டத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 5,719 பள்ளிக் குழந்தைகள் பயனடைய உள்ளனர்.
ஒவ்வொரு திட்டமும் சிறப்பு
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே தொடங்கப்பட்டு வரும் ஒவ்வொரு திட்டமும், தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு பசியோடு வரும் ஏழை குழந்தைகள், காலையில் சாப்பிடுவதற்காக முதலமைச்சர், காலை உணவு திட்டத்தை நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் சாப்பிட்டு பார்த்தேன். உணவு நன்றாக உள்ளது.
திராவிட மாடல் ஆட்சி
இந்துக்கள் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி, ஜாதி, மதம் எதற்கும் இங்கு இடம் கிடையாது. எல்லாத் திட்டங்களும் எல்லோருக்கும் சேரும் வகையில்தான் முதலமைச்சர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அனைவருக்குமான திட்டங்கள்
திருமண உதவி தொகை திட்டமாக இருந்தாலும் சரி, அல்லது மற்ற எந்த திட்டமாக இருந்தாலும் அனைவருக்கும் அந்தத் திட்டத்தின் பயன் சேரும் வகையில் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அனைவருக்கும் எல்லாம் சேரவேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.