நீட் மாணவி மாயம் வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் தேனிக்கு விரைந்த நாமக்கல் போலீஸ்!
ராசிபுரம்: நீட் தேர்வு எழுதிய மாணவி மாயமானது தொடர்பான வழக்கில் போலீஸார் விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
தமிழகத்தில் நீட் தேர்வு 2017 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான இந்த நீட் தேர்வானது மாணவ, மாணவிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருவதோடு அவர்களது உயிரை குடிக்கும் எமனாகவும் மாறிவிட்டது. இந்த தேர்வால் இதுவரை தமிழகத்தில் 16 பேர் இறந்துவிட்டனர்.
தமிழக அரசும் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தற்கொலை எந்த விஷயத்திற்கும் தீர்வாகாது என அறிவுறுத்தி வருகிறார்கள். எனினும் மாணவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவது வேதனையை தருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வின் போது தேர்வு எழுதுவதற்கு முன்பே சேலம் மாணவர் தனுஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் பிரபல தனியார் கல்லூரி ஆக்கிரமித்திருந்த ரூ. 2000 கோடி நிலம்.. அதிரடியாக மீட்ட அரசு
மாணவி
இதையடுத்து அரியலூர் அருகே சாத்தம்பாடி கிராமத்தில் கனிமொழி என்ற மாணவி தேர்வு எழுதிய அடுத்த நாளே தற்கொலை செய்து கொண்டார். அது போல் வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆக இந்த நீட் தேர்வால் மட்டுமே இதுவரை 3 பேர் பலியாகிவிட்டனர்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்
தமிழக அரசு சார்பில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. எனினும் மாணவர்கள் சிறு வயதில் மனதில் விதைத்த லட்சிய விதை பொசுங்குவதை எண்ணி மனம் நொந்து கடைசியில் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்.
வீட்டில் காணவில்லை
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2ஆவது முறையாக நீட் தேர்வு எழுதினார் மாணவி ஸ்வேதா.
இவர் தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நேற்று முன் தினம் காலை முதல் காணவில்லை. இதனால் பதறி போன பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்காததால் பெற்றோர் நாமகிரிபேட்டை போலீஸில் புகார் அளித்தனர். அவர்கள் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.
மாணவி விசாரணை
இந்த மாணவியின் தந்தை செந்தில்பாண்டியன், இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். ஸ்வேதா தனியார் பள்ளியின் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் சுவேதா நீட் தேர்வு எழுதினார். இந்த மாணவியின் தோழியிடம் விசாரணை நடத்தினர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இதனால் குழப்பமடைந்த போலீஸார் மாணவியின் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்தனர். அப்போது சுவேதா துப்பட்டாவை கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு இளைஞர் ஒருவருடன் பைக்கில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்கள்.
பேஸ்புக் காதல்
இந்த நிலையில் சுவேதா நேற்றைய தினம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளார். சுவேதாவுக்கு சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரது மகன் டேனியல் (26) என்பவருக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. டேனியல் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
காதலாக மாறிய நட்பு
நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் டேனியல் சென்னையில் இருந்து தனது டூவீலரில் நாமகிரிப்பேட்டைக்கு வந்துள்ளார். அங்கு சுவேதாவை அழைத்துக் கொண்டு தேனியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பேளுக்குறிச்சி முருகன் கோயிலில் இவர்கள் திருமணம் செய்து கொண்டு நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர்.
நாமகிரிப்பேட்டை போலீஸ் விசாரணை
சுவேதாவை போலீஸார் தேடுவதை கண்டு இருவரும் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த தகவல் நாமகிரிபேட்டை போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்றுள்ளனர். அங்கு காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.