அதிமுகவுடன் பாமக+ தேமுதிக கூட்டணி உடன்பாடு எதற்கு?.. உதயநிதி பரபரப்பு விளக்கம்
சேலம்: அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாமகவும், தேமுதிகவும் தற்போது அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது, சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் ஓட்டுக்காகவும்தான் என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.
சேலம் உடையாப்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் கூறும்போது, பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என கூறி விட்டு பொதுமக்கள் அனைவரையும் ஏமாற்றி விட்டார். எனவே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
திடீர் திருப்பம்.. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி?
சீட்டு
மேலும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாமகவும், தேமுதிகவும் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது, சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் ஓட்டுக்காகவும்தான் என்றார் உதயநிதி.
உதயநிதி
இதில் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த திரளான திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாழப்பாடி ஆத்தூர் உள்ளிட்ட பகுதியில் உதயநிதி பிரசாரம் செய்தார்.
பரபரப்பு
தென் சென்னையில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து உதயநிதி பிரசாரம் செய்திருந்தார். அப்போது தமிழச்சி அழகானவர் இவருக்கே ஓட்டு போடுங்கள் என்று கூறி உதயநிதி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அதிருப்தி
இது பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு வேட்பாளர் அதை செய்தார், இதை செய்தார் என கூறி வாக்கு கேட்பது வழக்கம். ஆனால் பெண் என்றும் பாராமல் ஒரு கட்சிக்கு வாக்கு சேகரிக்கிறோம் என்ற பொறுப்பில்லாமல் உதயநிதி பேசியது திமுகவினரையே முகம் சுளிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.