எடப்பாடி பச்சை பஸ்ஸுலயும்! விஜய் மஞ்சள் பஸ்ஸுலயும் போறாங்க! நம்ம பிங்க் பஸ்தான் கெத்து! உதயநிதி கலகல!
சேலம்: ஒருவர் பச்சை பஸ்ஸிலும் மற்றொருவர் மஞ்சள் பஸ்ஸிலும் பிரச்சாரம் செய்ய போகிறார்கள். ஆனால் நம் முதல்வரின் பிங்க் பஸ்தான் கடைசியில் ஜெயிக்க போகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் அருகே கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இதுவரை சுயஉதவி குழுக்களுக்கான கடன்கள் என பார்த்தால் 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வங்கி கடன் இணைப்புகளை வழங்கியிருக்கிறோம். இதையெல்லாம் முதல்வர் உங்களுக்கு கொடுக்கும் கடன் தொகையாக பார்க்கவில்லை. உங்கள் உழைப்பின் மீது வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையாகத்தான் முதல்வர் பார்க்கிறார்.
இதை பொறுக்காமல் சிலர் விமர்சனங்களை செய்து வருகிறார்கள். அண்மைக்காலமாக தொலைக்காட்சிகளில் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கலர் பஸ்களை எடுத்துக்கிட்டு பிரச்சாரம் செய்ய போறாங்க. ஒருத்தர் பஸ்ஸை கலர் பஸ்ஸு, இன்னொருத்தர் மஞ்சள் கலர் பஸ்ஸு! ஆனால் நான் சொல்கிறேன், கடைசியாக எல்லாத்தையும் ஓவர்டேக் செய்து ஜெயிக்க போவது நம்ம பிங்க் பஸ்ஸுதான்.
மகளிராகிய நீங்கள் பயன்படுத்தக் கூடிய முதல்வரின் பிங்க் பஸ்ஸுதான் எல்லாத்தையும் ஓரங்கட்டிவிட்டு ஜெயிக்க போகிறது. திராவிட மாடல் அரசு 2026 ஆம் ஆண்டிலும் தொடர வாக்களியுங்கள் என உதயநிதி பேசியிருந்தார்.
சேலத்தை சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் சதாசிவம் (அன்புமணி ஆதரவாளர்), அருள் (ராமதாஸ் ஆதரவாளர்) ஆகிய இருவரும் தமிழக அரசை போட்டி போட்டுக் கொண்டு பாராட்டினார்கள். அப்போது உதயநிதி கூறுகையில் சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது என பாராட்டியதற்கு நன்றிகள். அவர்கள் எப்போதுமே இதே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என உங்கள் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே உள்கட்சி பிரச்சினைகள் நிலவி வருகின்றன. பாமகவுக்கு 5 சட்டசபை உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஜி.கே.மணி, சேலம் எம்எல்ஏ அருள் ஆகியோர் ராமதாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அதே சமயம், தருமபுரி வெங்கடேஸ்வரன், சிவக்குமார், மேட்டூர் சதாசிதவம் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார்கள்.
இந்த நிலையில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். ஆனால் பாமக அன்புமணியோ தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஒற்றுமை குறித்து உதயநிதி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications