திமுக கூட்டணியில் அதிருப்தி! சேலம் பொதுக்கூட்டத்தில் வெடித்த வேல்முருகன்! டென்ஷன் ஆக்கிய போலீஸ்!
சேலம்: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருந்து வருவதை கண்கூடாக அறிய முடிகிறது.
அமைச்சர் எ.வ.வேலு பேச்சில் தடுமாற்றம் தென்படுவதாகவும் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுத்துக்கொள்ளுங்கள் எனவும் தமிழக அரசை ஒரு பிடி பிடித்திருக்கிறார்.
மேலும், சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடிகளை கட்ட அனுமதி மறுத்த சேலம் போலீஸாருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தனது பழைய பின்னணி பற்றியும் கூறி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

திமுக கூட்டணி
2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடந்த சில மாதங்களாக திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனை அவரது மேடை பேச்சுக்களே வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. இந்நிலையில் சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய வேல்முருகன், தனது கட்சி கொடிகளை கட்டக்கூடாது என்று சொல்வதற்கு போலீஸுக்கு என்ன உரிமை இருக்கிறது என எடுத்த எடுப்பிலேயே சூடானார்.

பழைய பின்னணி
தன்னைப் பற்றியும் தனது பழைய பின்னணி பற்றியும் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, செந்தாமரைக் கண்ணன், டேவிட்சன் ஆசிர்வாதம் போன்றவர்களிடம் சேலம் போலீஸ் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என ஆவேசம் காட்டினார். மேலும், குறிப்பிட்ட ஒரு எஸ்.ஐ.மீது மிகக் கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய வேல்முருகன், என் கட்சிக் கொடியை கட்டக்கூடாது எனச் சொல்ல நீ யார் என கர்ஜித்தார். அவரது கோபம் அப்படியே அமைச்சர் எ.வ.வேலு மீதும் திரும்பியது.

அமைச்சர் எ.வ.வேலு
எட்டு வழிச்சாலை விவகாரத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சில் தடுமாற்றம் ஏன் என வினவிய அவர் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுத்துக்கொள்ளுங்கள் என தமிழக அரசுக்கு செக் வைத்தார். இந்தளவு வேல்முருகன் டென்ஷன் ஆனதற்கு காரணம் சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டத்துக்காக கட்டப்பட்ட கொடிகளை கழற்றுமாறு போலீஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். பின்புலம்
தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்துடனும் டெல்லியின் நேரடி தொடர்புடனும் இருப்பதாக குற்றஞ்சாட்டினார். இது போன்ற அதிகாரிகளால் தான் முதலமைச்சரால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை எனத் தெரிவித்தார். இதனிடையே சேலத்தில் என்ன நடந்தது வேல்முருகனின் கோபத்துக்கு என்ன காரணம் என்பதை மூத்த அமைச்சர்கள் மூலம் பேசி முதல்வர் நடவடிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications