"நான் நம்பி முதல்வராக்கினேன்.. ஆனால் முதுகில் குத்திவிட்டார்.." எடப்பாடியில் நின்றபடி கலங்கிய சசிகலா

Subscribe to Oneindia Tamil

சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் சசிகலா தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது எடப்பாடியை முதல்வராக்கியது மட்டுமே தனது தவறு என்றும் தன்னை நம்பியவர்களே தனது முதுகில் குத்திவிட்டனர் என்றும் பேசினார். மேலும், தன்னை சிறையிலேயே வைத்து அழிக்கப் பார்த்ததாகவும் சாடினார்.

தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. திமுக, அதிமுக வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், நாதக மற்றும் தவெக தனித்துப் போட்டியிடுகிறது. இது தவிர சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், அதாவது அபுதமமுக கட்சியும் ராமதாஸ் தரப்புடன் களத்தில் நிற்கிறது.

Tamil nadu assembly election 2026 Sasikala Edappadi

சசிகலா

சசிகலா தரப்பு கட்சி அதிமுக வாக்குகளைப் பெரியளவில் பிரிக்கும் எனச் சொல்லப்படுகிறது. சசிகலாவும் மாநிலம் முழுக்க சுற்றி தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி இபிஎஸ்-ன் சொந்த தொகுதியான எடப்பாடியில் அஇபுதமமுக சார்பில் போட்டியிடும் சுரேஷ் என்பவரை ஆதரித்து சசிகலா நேற்றைத் தினம் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, நம்பினவர்களே தனது முதுகில் குத்திவிட்டார்கள் என்றும் நம்பி ஒருவரை முதலமைச்சர் ஆக்கியது தான் மிகப் பெரிய குற்றம் என்று ஆவேசமாகப் பேசினார். சேலம் மாவட்டத்தின் எடப்பாடி தொகுதியில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட சசிகலா, அங்கிருந்த பொதுமக்களிடையே பேசுகையில் அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் திமுக அரசு என இருதரப்பையும் கடுமையாகச் சாடினார்.

முதுகில் குத்திவிட்டனர்

வேனில் நின்றபடி பரப்புரை செய்த சசிகலா, "யாரும் எளிதில் பெற முடியாத ஒரு மிகப் பெரிய அங்கீகாரமான முதல்வர் பதவியை இந்த கொங்கு மண்டலத்திற்கு வழங்க முடிவு செய்து, அதனை நிறைவேற்றியும் காட்டினேன்.. ஆனால், நான் நம்பியவர்களே எனது முதுகில் குத்திவிட்டார்கள். அவர்களுக்கு அப்படி நான் என்ன கெடுதல் செய்துவிட்டேன் என எனக்கே தெரியவில்லை.. உங்களை முதல்வராக்கியது தான் நான் செய்த குற்றமா.. உங்களை முதல்வராக்கியதற்காக என்னைக் கட்சியில் இருந்து தூக்கினீர்கள்.. சிறையில் கூட என்னை அழிக்கப் பார்த்தீர்கள்" என்றார்.

எடப்பாடி தொகுதியில் நடிகர் விஜய்யின் தவெக கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய சசிகலா, "ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், போட்டியிடவே விடாமல் தடுப்பது என்ன நியாயம்? கல்யாண வீட்ல சீப்பை ஒளிச்சு வச்ச கதையா இருக்கு இவங்க பண்றது" எனக் கடுமையாக விமர்சித்தார்.

திமுக- எடப்பாடி

தொடர்ந்து பேசிய அவர், "திமுக-வும் இபிஎஸ்-ஸும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில்தான் இருக்கிறார்கள். கொடநாடு வழக்கில் என்ன நடந்தது என்பது எனக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். இரு தரப்பும் கூட்டுக்களவாணிகளாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டைச் சூறையாடுகிறார்கள். சொந்தத் தொகுதியான எடப்பாடியிலேயே அரசுப் பொறியியல் கல்லூரி இல்லை, சாலை வசதி இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் தனது தொகுதிக்காகச் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி எதையும் கேட்கவில்லை" என்றும் விமர்சித்தார்.

மோசடி

தமிழக அரசு தற்போது சுமார் 12 லட்சம் கோடி ரூபாய்க் கடனில் இருப்பதாகவும், இதற்காக மாதம் 7,000 கோடி ரூபாய் வட்டி மட்டுமே கட்டப்படுவதாகவும் சசிகலா விமர்சித்தார். இவ்வளவு கடன் நெருக்கடியில் இருந்து கொண்டு, பெண்களுக்கு 8,000 ரூபாய் டோக்கன் வழங்குவோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை என்றும், இது நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது என்றும் சாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+