சேலம் கல்லூரி விழாவில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியது என்ன? அவரது பேச்சு சர்ச்சையானது ஏன்?
சேலம்: சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்தி குறித்து என்ன பேசினார்.. அவரது பேச்சு இந்தி ஆதரவாளர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பாளர்களால் சர்ச்சையாவது ஏன் என்பதை பார்ப்போம்.
சேலத்தில் தான் படித்த தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், எவ்ளோ உயரத்துக்கு போனாலும் தன்னடக்கத்தை விட்டுராதீங்க என்று கூறி உற்சாகமுட்டும் வகையிலும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

தொடர்ந்து மாணவர்கள், நடராஜனிடம் கேள்விகளை எழுப்பினார்கள். அதில் ஒரு மாணவர் கேள்வி எழுப்பும் போது, முதன் முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாட போகும் போது உங்களுக்கு கிரவுண்ட் அனுபவம் எப்படி இருந்தது அண்ணா என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசுகையில், எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. அங்கு முழுமையாக இந்தி தான் பேசுவார்கள்.. எனக்கு தமிழை தவிர வேறு எதுவும் தெரியாது.. அப்போது அந்த அணியில் பில்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் சார் இருந்தார்.. அவருக்கு தமிழ் தெரியும். அவர் தான் எனக்கு இந்தியில் பேசுவதை எதுவாக இருந்தாலும் மொழிமாற்றி என்னிடம் கூறுவார். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் அந்த கஷ்டங்களை நான் பார்க்கவில்லை.. எனக்கு விளையாட ரொம்ப பிடிக்கும்.. என்னோட விஷயத்தை நான் பண்ணிக்கொண்டிருப்பேன்.
இதனால் நான் கஷ்டப்பட்டு, முடியாது என்று நான் நினைத்திருந்தேன் என்றால் அதுவேலைக்கே ஆகாமல் போயிருக்கும்.. நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் (இந்தி தெரியாமல்). சொல்லபோனால் ஆரம்பத்தில் தனியாக இருப்பது போல் ஃபீல் இருந்தது. அப்போது எல்லாம் எனக்கு ஒரு விஷயம் வந்து போனது. நமக்கு நல்ல குணங்கள் இருந்தால், எங்கிருந்தாலும் ஒருவர் நமக்கு உதவி செய்வார்.. அந்த மாதிரி ஸ்ரீதர் சார் வந்து அந்த வருடம் முழுவதும் எனக்கு உதவி செய்தார்.
ஷேவாக் சார் பயங்கர சப்போர்ட் பண்ணுணாரு.. ஷேவாக் சாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஐபிஎல் போட்டிகளில் காயம் அடைந்தால் சில ரூல் இருக்கிறது. நான் ஐபிஎல் போட்டிகளில் காயம் அடைந்தால், அதை எல்லாம் (ரூல் விஷயத்தை) அவர் பார்த்துக் கொண்டார். அத்துடன் முதலில் குடும்பத்தை பாரு.. நல்லா பண்ணு என்று என்னை அவர் பயங்கரமாக உற்சாகமூட்டுவார்..
இந்தி தெரியாததால் தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகலையா.. நடராஜனுக்கு ராஜீவ் காந்தி பதிலடி
ஆனால் எனக்கு தடுமாற்றம் இருந்தது.. அதனால் தான் சொல்கிறேன்.. தப்போ சரியோ இங்கிருந்தே பேச ஆரம்பித்து விடுங்கள்.. பின்னாடி போகும் போது, உங்களுக்கு இன்னமும் ஈஸியாக இருக்கும்.. ஏனெனில் அந்த நம்பிக்கை உங்களுக்கு வந்துவிட்டால் தப்போ சரியோ பேசிவிடலாம்.. அதற்கு அப்புறம் 2018ல் சன்ரைசஸ் ஹைதராபாத் வந்த பின்னர் நிறைய பேச ஆரம்பித்தேன்..
நிறைய கல்லூரிகளுக்கு சென்று எனது அனுபவத்தை நான் ஏன் பகிர்கிறேன் என்றால், என்னை போல் நிறைய பேர் வர வேண்டும் என்பது தான்.. எந்த மாதிரி விஷயத்தில் எல்லாம் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே இதை சொல்வேன்.. சிட்டி சைடில் நான் போனதே இல்லை.. கிராமங்கள் சைடில் தான் போயிருக்கிறேன்.. என்னை போல் நிறைய பேர் வர வேண்டும் என்பது தான் .. ஆகவே இந்த மாதிரி பேசுவதை இங்கிருந்தே கற்றுக்கொள்ளுங்கள் என்பதற்காகவே சொல்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன்" இவ்வாறு நடராஜன் கூறினார்.
நடராஜன் இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டது குறித்து பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.இந்த பேச்சுக்கு ஆதரவாக இந்தி ஆதரவாளர்களும். நடராஜனின் இந்த பேச்சுக்கு எதிராக இந்தி எதிர்ப்பாளர்களும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications