அதிமுகவை சுருட்டி போட்ட திமுக.. சேலம் வீட்டை விட்டு வெளியே வராத எடப்பாடி பழனிசாமி?
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்திலேயே தங்கியிருக்கிறாராம். இதற்கு சில காரணங்களும் கசிந்து வருகின்றன.
மக்களவை தேர்தலில், தமிழகத்தில், அதிமுக 32 இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. இதில், 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்தது.. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட்டை இழந்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

விளவங்கோடு: அதேபோல, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆகமொத்தம், 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது.. 3வது, 4வது இடங்களில் அதிமுக வந்திருப்பது, தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் அதிமுக வென்றிருக்கும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து கூறியிருந்தார்.. அதேபோல, அதிமுகவிலிருக்கும் பாஜக ஆதரவாளர்களும் இதே கருத்தையே சொல்லி வருகிறார்கள்.
பாஜக காரணமா?: ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, இந்த கருத்தை மறுத்துள்ளார்.. தான் ஒருவர் மட்டுமே எல்லா இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்ததால்தான் தோல்வி என்று எடப்பாடி பழனிசாமி காரணம் சொல்லி உள்ளார். அத்துடன், பாஜகவுடன் வரப்போகும் தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று இப்போதே அறிவித்தும்விட்டார்.. இதனால், அதிமுகவுக்குள் தேர்தல் தோல்வி குறித்து, 2 விதமான கருத்துக்கள் நிலவி கொண்டிருக்கின்றன.
இதற்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுகவுக்கு தோல்வி என்று சொல்லப்பட்ட நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைக்காததால்தான் தோல்வி என்று சொல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எப்படி பார்த்தாலும், வலுவான கூட்டணி இல்லாதது, பலமான தேர்தல் வியூகம் அமைக்காதது போன்றவைகளாலேயே அதிமுக சறுக்கலை சந்தித்திருப்பதாக தொண்டர்கள் கருதுகிறார்கள்.
வீடியோவில் ஆவேசம்: ஒருசிலர் தங்கள் ஆதங்கத்தையும் ஆவேசத்தையும வீடியோவை வெளியிட்டு, "இனிமேலாவது அனைவரும் ஒன்றுசேர்ந்து, எம்ஜிஆர் பாடுபட்டு உருவாக்கிய கட்சியை நடத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள்.
அதேபோல அதிமுக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தங்கள் அதிருப்தியை நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்க மும்முரமாகி வருகிறார்களாம்.
மா.செ.கூட்டம்: ஆனால், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்னும் கூட்டாமல், சேலம் வீட்டிலேயே எடப்பாடி பழனிசாமி முடங்கி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.. வழக்கமாக ஒரு கட்சி தேர்தலில் தோல்வியடைந்துவிட்டால், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களை அழைத்து தோல்விக்கான காரணங்களை ஆராய்வதும், அதை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவதும் வழக்கம்.
ஆனால், அதிமுகவில் இன்னும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டாமலேயே உள்ளதாம். தேர்தல் தோல்விக்கு பிறகு பல்வேறு சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மா.செ. கூட்டத்தை கூட்டினால் சலசலப்பு அதிகமாகி, கோஷ்டி பூசல் ஏற்பட்டுவிடுமோ? என்ற கலக்கமும் அதிமுக மேலிடத்தை சூழ்ந்திருக்கிறதாம்..
அதிமுக கோட்டை: அதேபோல, அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும், சென்னை, கோவை பகுதிகளிலும் படுதோல்வியை அதிமுக சந்தித்துள்ளது.. இதில், சென்னையில் டெபாசிட்டை இழந்துள்ளதால், அங்கு சென்றாலும் பூசல்கள், தகராறுகள், ஏற்படலாம் என்பதால், சென்னைக்கும் எடப்பாடி இன்னமும் வருகை தராமலேயே இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல, முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை நேரில் வந்து சந்திக்கவில்லையாம்..
தற்போதுள்ள சூழ்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டாமல் இருப்பதுதான் நிர்வாகிகளின் கோபத்தை தவிர்க்கும் என்பதால், சேலத்திலேயே எடப்பாடி பழனிசாமி தங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.
இதற்கான உண்மை காரணம் உறுதியாக தெரியவில்லை என்றாலும், மா.செ.க்கள் கூட்டத்தை விரைந்து நடத்தினாலே, இதுபோன்ற கணிப்புகளுக்கும், யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications