மாங்கனி மாநகரை ஆளப்போவது யார்? மேயர் வேட்பாளர் ரேஸால் பரபரக்கும் சேலம்!
சேலம்: சேலம் மாநகராட்சியை கைப்பப்பற்ற வேண்டும் என்பதில் திமுக தலைமை மிகவும் உறுதியாக இருப்பதால், இப்போதே வேட்பாளர் தேர்வு படலத்தை திரைமறைவாக தொடங்கிவிட்டது.
யாரை நிறுத்தினால் பொருத்தமாக இருக்கும், கோஷ்டிக்குள் சிக்காதவர்கள் யார், என்பன உள்ளிட்ட விவரங்களை எல்லாம் கே.என்.நேரு மூலம் ஸ்டாலின் அலசி ஆராயத் தொடங்கியிருக்கிறாராம்.
Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்குமான போட்டியாக கருதுவதால் சேலம் மாநகராட்சி தேர்தலில் ஸ்டாலின் அதீத கவனம் செலுத்த தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சேலம் மாநகராட்சி
மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு, இரும்பு ஆலை, என சேலத்துக்கு பெருமை தேடி தரக்கூடிய பல சிறப்புகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் விட தமிழகத்துக்கு ஒரு முதலமைச்சரை தந்த ஊர் என்ற பெருமையையும் சேலம் பெற்றிருக்கிறது. இப்படி வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சேலம் மாநகரை யார் ஆளப்போகிறார்கள் என்பது தான் அங்கு எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.
அதிமுக கோட்டை
வீரபாண்டி ஆறுமுகம் உயிருடன் இருந்தவரை சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக தக்க வைத்து வந்த நிலையில் அவரது மறைவுக்கு பிறகு நிலைமை மாறத்தொடங்கியது. கோஷ்டிப்பூசல் நாளுக்கு நாள் தலைதூக்கத் தொடங்கிய பிறகு சேலத்தில் திமுக மெல்ல அஸ்தமனமானது. திமுகவின் கோஷ்டிப்பூசல் அரசியலை சரியாக பயன்படுத்திக்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் மாவட்டச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அசுர வேகத்தில் அங்கு வளர்த்து வைத்திருக்கிறார்.
10 தொகுதிகள்
இதன் எதிரொலியாக தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் திமுக வெற்றிபெற்றது. சேலம் மாவட்டத்தில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியை முதலமைச்சர் ஸ்டாலினால் இன்னுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தான் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியை கைபற்றும் நோக்கில் கே.என்.நேருவை அங்கு களத்தில் இறக்கியுள்ளார்.
தோற்கக்கூடாது
தமிழகத்தின் மற்ற மாநகராட்சிகளில் எப்படியோ, ஆனால் கோவை மற்றும் சேலம் மாநகராட்சியில் ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு தோற்கக்கூடாது என ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறாராம். இதனால் இந்த இரண்டு மாநகராட்சிகளிலும் வலிமையான வேட்பாளரை மேயர் பதவிக்கு நிறுத்த தேர்வுப்படலம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகனான மறைந்த செழியனின் மருமகன் டாக்டர் தருண் தனக்கு மேயர் தேர்தலில் வாய்ப்பு கிட்டும் என காத்திருக்கிறார்.
யார் யார்?
இதேபோல் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, உமாராணி, மாணவரணி நிர்வாகி தமிழரசன் ஆகியோரும் தலைமை தங்களை கைவிடாது என சீட் எதிர்பார்த்துள்ளனர். இதில் உமாராணி முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். இதேபோல் தமிழரசன் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருக்கிறார். சமுதாயம், பணம், மக்கள் மத்தியில் பரிச்சயம், கோஷ்டியில் சிக்காத நபர், என பல தகுதிகளின் அடிப்படையில் நேரு ஒரு லிஸ்டை தயார் செய்து வைத்திருக்கிறாராம்.
எடப்பாடி பழனிசாமி
இதனிடையே ஆளுங்கட்சி யாரை நிறுத்தினாலும் சரி, சேலம் மேயர் பதவியை நாம் தான் கைப்பற்றுவோம் என ஆலோசனைக் கூட்டங்களில் நம்பிக்கை தெரிவித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கியது போல், இப்போது சேலத்தில் இருந்தே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தை முதல் ஆளாக அவர் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.