சேலம் ஏற்காடு மகேஷ்வரி.. கோவை மாணவி அனுப்பிரியா.. ஒரு நிமிட தவறான முடிவால் முடிந்த வாழ்க்கை
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கே.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மகேஷ்வரி என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் இவரது கணவர் கோவிந்தராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.இதனால் மகேஷ்வரி எடுத்த முடிவு குடும்பத்தையே அதிர வைத்துள்ளது.இதேபோல் கோவையில் ஒரு கல்லூரி மாணவி நேற்று, தன் மீது சக மாணவி போட்ட பழியால் தவறான முடிவெடுத்தார்.
சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் இன்று பலர் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நடக்கிறது.. சிலர் குடும்ப பிரச்சனையில் தவறான முடிவெடுப்பதும் அதிகரித்துவிட்டது. சிலர் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது, நடக்கும் சம்பவங்களாலும் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். சேலத்தில் திருமணமான ஒரு இளம் பெண் மற்றும் கோவையில் ஒரு கல்லூரி மாணவி ஆகியோர் ஒரே நாளில் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு சம்பவங்களில் நடந்த இந்த நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.

ஏற்காடு பெண்
சேலம் ஏற்காட்டில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கே.புத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 30). மகேஷ்வரி அந்த பகுதியில் ஒரு தோட்ட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கோவிந்தராஜ்-மகேஸ்வரி தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வார காலமாக கோவிந்தராஜுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகறிது இதனால் மனமுடைந்த மகேஸ்வரி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரைவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஏற்காடு போலீசார் அங்கு விரைந்து சென்று மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் கல்லூரி மாணவி
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி வானதி. இவர்களது ஒரே மகள் அனுப்பிரியாவுக்கு 19 வயதுஆகிறது. இவர் கோவையில் விடுதியில் தங்கி, பாரா மெடிக்கல் டிகிரி படித்து வந்தார். இந்தநிலையில் அனுபிரியா தங்கியிருந்த அறையில், மற்றொரு மாணவியின் மணிபர்ஸ் காணாமல் போனது.
அதை அனுப்பிரியா எடுத்ததாக உடன் இருந்த மாணவிகள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அனுபிரியாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் அனுப்பிரியாவின் பெற்றோரிடமும் தகவல் கொடுத்தனர். இதனால் மன வேதனை அடைந்த மாணவி அனுப்பிரியா, அங்குள்ள 4-வது மாடியில் இருந்து குதித்து உயிரைவிட்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications