மாத்தாதீங்க மாத்தாதீங்க.. ரோகிணிதான் எங்களுக்கு வேண்டும்.. கிளம்பியது டிவீட்டுகள்!
சேலம் கலெக்டர் ரோகிணி மாற்றப்பட என்ன காரணம் என தெரியவில்லை
Recommended Video
சேலம்: ஒரு கலெக்டரை கிண்டல் செய்து, ஏகப்பட்ட மீம்ஸ்கள் வெளிவந்தது தமிழ்நாட்டிலேயே அநேகமாக ரோகிணிக்குதான் இருக்கும்!
இதுவரைக்கும் சேலத்துக்கு 170 கலெக்டர்கள் வந்துவிட்டார்கள். ரோகிணி 171-வது கலெக்டர். ஆனால் இந்த மாவட்டத்துக்கு இவர்தான் முதல் பெண் கலெக்டர். கலெக்டராக பதவி ஏற்றது முதல் நல்லது, கெட்டது என இரு சாராரின் விமர்சனங்களையுமே தாங்கி வந்தார் கலெக்டர் ரோகிணி.
இது அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே ஆரம்பமானது. யாரும் எனக்கு வாழ்த்து சொல்ல, பரிசு பொருளோ, சால்வைகளோ கொண்ட வர வேண்டாம் என்றதுமே, தமிழ்நாடே இந்த இளம் புது கலெக்டரை திரும்பி பார்த்தது. மீடியாக்கள் இவரை பற்றின செய்திகளை தினம் தினம் தவறாமல் வெளியிட்டவாறே இருந்தனர்.
ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன்? ஏன் இந்த யூடர்ன்
லேடி எம்ஜிஆர்
அதேபோல இவரது நடவடிக்கைகளையும் சேலம் மக்கள் கவனிக்கவும் செய்தனர். மனு கொடுக்க வரும் மாற்று திறனாளிகள் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது, வயசானவர்கள் வந்தால் அவர்களை கட்டி அணைத்து தழுவுவது, ஆசிரியர்கள் ஸ்டிரைக் என்றால், கிளாஸ்ரூமுக்குள் நுழைந்து பாடம் எடுப்பது, பிறகு ஒருநாள் திடீரென குழந்தைகளுடன் உட்கார்ந்து சத்துணவு சாப்பிடுவது என ஒரு "லேடி எம்ஜிஆர்" அளவுக்கு பரபரப்பை தந்தார். மாவட்ட மக்களும் உருகிவிட்டார்கள்.
அலட்சியம்
கடைசியில் ரோகிணியின் நடவடிக்கைகள் எல்லாமே ஓவர் டோஸ் ஆகிவிட்டது போலும். கொடுத்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் சரிவர எடுப்பதில்லை, தமிழகத்துக்கு எதிரான அதாவது சேலம் மாவட்ட மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு வாயே திறப்பதில்லை, என குமுறல்கள் வெளிவர ஆரம்பித்தன. குறிப்பாக எட்டு வழிச்சாலையில் இவர் காட்டிய மெளனமும், அலட்சியமும் சேலம் மக்களை அதிர வைத்து விட்டது.
மீம்ஸ்கள்
இந்த தருணத்தில் இருந்துதான், ரோகிணியின் பாராட்டப்பட்ட, கவனிக்கத்தக்க செயல்கள் எல்லாமே மீம்ஸ்களான வெளிவந்து கிண்டல் கேலிக்கு ஆளாக ஆரம்பித்துவிட்டன. இப்போது இவரை தமிழக அரசு மாற்றம் செய்து உத்தரவிட காரணம் என்னவென்று தெரியவில்லை. என்றாலும், ரோகிணி சேலம் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக எந்த நல்லதையுமே செய்யவில்லை என்று ஒரேடியாக சொல்லிவிட முடியாது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், குடிநீர் பிரச்சனைக்கும் ரோகினியின் செயல்பாடுகள் பாராட்டும்படியாகத்தான் உள்ளது.
மாவட்ட மக்கள்
எத்தனையோ குடும்பத்தின் நிலைமையை ரோகிணி மாற்றி உள்ளதை எவராலும் மறுக்க முடியாது.. அதை மறக்கவும் முடியாது.. அப்படி மறந்தால் அதைவிட நன்றி கெட்ட தனம் எதுவும் இருக்க முடியாது. அதனால்தான் ரோகிணி எங்களுக்கு வேண்டும் என்று திரும்பவும் கோரிக்கை குரல் மாவட்ட மக்களிடம் இருந்து எழுவதை கேட்க முடிகிறது.
புரியாத புதிர்
அதேசமயம், ரோகிணியை திடீரென மாற்றி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் போட்ட உத்தரவுதான் புரியாத புதிராக உள்ளது. அதை விட இசைப் பல்கலைக்கழக பதிவாளர் என்ற பதவியில் அவரை முடக்கி வைக்க என்ன காரணம் என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன. தமிழகத்தின் எத்தனையோ புரியாத புதிர்களில் ரோகிணியும் ஒன்றாக இணைந்திருக்கிறார்.