சேலம் மாவட்டம் பிரிப்பு.. 5 லட்சம் பட்டா.. மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் எழுப்பிய முக்கியமான கேள்வி
சேலம்: மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் நேற்று சட்டசபையில் பேசுகையில், சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் என்பது ஒரு பெரிய மாவட்டம். 11 தொகுதிகள் கொண்ட மாவட்டம். எனவே சேலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், சேலம் மாவட்டம் என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது மேட்டூர் தொகுதி எம்எல்ஏவான பா.ம.க.வைச் சேர்ந்த சதாசிவம் பேசினார். அப்போது விவாதத்தில் அவர் பேசியதை பார்ப்போம்.

சதாசிவம் எம்எல்ஏ பேசுகையில், "சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு கிட்டத்தட்ட 1,500 பட்டா ரெடியாக இருக்கிறது. ஏன் இன்னும் கொடுக்கவில்லை?. காத்திருப்போர் பட்டியலில் ஏற்கனவே 1,000 பேர் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 5 லட்சம் பட்டா இந்த ஆண்டு வழங்கப்படும் என்று இந்த ஆண்டு பட்ஜெட்டில் சொல்லி இருக்கிறீர்கள். இந்த ஒரு வருடத்தில் எப்படி 5 லட்சம் பட்டா கொடுக்க அரசால் முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், "ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். முதல்வர் தற்போது கும்மிடிப்பூண்டிக்கு செல்ல இருக்கிறார். 50 ஆயிரம் பேருக்கு அங்கே பட்டா கொடுக்க உள்ளோம். உங்கள் பகுதியில் கொடுக்காமல் இருந்தால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அந்தக் காரணத்தை என்னிடம் வந்து தெரிவித்தால், அதனை நிச்சயம் நிவர்த்தி செய்வோம் என்று கூறினார்.
சதாசிவம் எம்எல்ஏ மீண்டும் பேசுகையில், சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் என்பது ஒரு பெரிய மாவட்டம். 11 தொகுதிகள் கொண்ட மாவட்டம். எனவே சேலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், சேலம் மாவட்டம் என மூன்றாகப் பிரிக்க வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து 20 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் செல்கிறது. சேலம் மாவட்டத்திற்கு ஆண்டொன்றுக்கு 2 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். இதை நீர்வளத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் காலத்தில் எங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்
அப்போது அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கையில், தண்ணீர் கேட்கிறீர்கள், கண்டிப்பாக வழங்குவோம் என்றார்.
சதாசிவம் எம்எல்ஏ மீண்டும் பேசுகையில், சட்டமன்ற உறுப்பினர் நிதியை ரூ.5 கோடியாக உயர்த்தி கொடுக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினருக்கு கார் கொடுக்க வேண்டும். நகராட்சியில் 500 ஓட்டுகள் வாங்குகிறவர்களுக்கு கார் இருக்கிறது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர் 65 கிலோ மீட்டர் சுற்றி வருகிறேன். மக்கள் சேவை செய்கிறோம். தமிழ்நாடு அரசு என்று சின்னம் பொறித்த காரை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.












Click it and Unblock the Notifications