மூத்த காங். தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டுக்கு தீ வைப்பு..! பதற்றம்..!
நைனிடால்: இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய புத்தகம் எழுதியதாக குற்றம்சாட்டப்படும் மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் வீடு மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் சல்மான் குர்ஷித் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sunrise Over Ayodhya: Nationhood in Our Times- இதுதான் சல்மான் குர்ஷித் எழுதிய 354 புத்தகம். அண்மையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது முதல் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
சல்மான் குர்ஷித் இந்த புத்தகத்தில் இந்துத்துவா கோட்பாட்டை விமர்சித்திருக்கிறார்; இந்துத்துவா சித்தாந்தத்தை இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுடன் ஒப்பிட்டுள்ளார் என்பது மிக முக்கியமானது குற்றச்சாட்டு. நூல் வெளியீட்டு விழாவிலும் இதேபோன்ற கருத்தை சல்மான் குர்ஷித் பேசினார் என்பதும் புகார்.

டெல்லியில் புகார்
இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசில் சல்மான் குர்ஷித்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் சிலர் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார் சல்மான் குர்ஷித். இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் சல்மான் குர்ஷித் பேசியுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தடை செய்ய கோரி கடிதம்
இதேபோல் பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங் என்பவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், சல்மான் குர்ஷித்தின் புதிய புத்தகத்தை தடை செய்ய வேண்டும். இந்துக்களை அவமதித்திருக்கிறார் சல்மான் குர்ஷித். இந்த புத்தகத்தை வெளியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தி இருந்தார்.

சல்மான் குர்ஷித் வீடு மீது தாக்குதல்
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள சல்மான் குர்ஷித் வீட்டை ஜெய் ஶ்ரீராம் முழக்கங்கள் எழுப்பிய படி பாஜக கொடி பிடித்து வந்தவர்கள் தாக்கி உள்ளனர். மேலும் சல்மான் குர்ஷித்தின் வீட்டுக்கு அந்த குழு தீ வைத்தும் இருக்கிறது. இது தொடர்பான படங்களை சல்மான் குர்ஷித் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன.

தாக்குதலுக்கு கண்டனம்
தமது வீடு மீதான தாக்குதலுக்கு சல்மான் குர்ஷித் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உள்ளிட்டோரும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான சல்மான் குர்ஷித் வீடு மீதான இத்தாக்குதல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications