ஊழல் புகாரில் திரிணாமுல் அமைச்சருக்கு பெரும் சிக்கல்! கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு! மம்தாவுக்கு தலைவலி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திரிணாமுல் அமைச்சர் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் இதற்கு முன்பு மேற்கு வங்க கல்வித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
கல்வித் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஆசிரியர் தேர்வு ஆணைய ஆட்சேர்ப்பில் இவர் ஊழல் செய்ததாகப் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.

ரெய்டு
இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் சில நாட்களுக்கு முன்பு பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய நண்பரான அர்பிதா முகர்ஜியின் வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பல மணி நேரம் நீட்டித்த இந்தச் சோதனையில் கைப்பற்றப் பணத்தை எண்ணி முடிக்கவே அவர்களுக்கு சில மணி நேரம் வரை ஆனது.

மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இருப்பினும், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இருந்தனர்.

நீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணையில் அமைச்சரைத் தனியார் மருத்துவமனையில் இருந்து புபனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் அமலாக்கத் துறை விசாரணையில் இருந்து தப்பிக்க, அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையில் அட்மிட் ஆவதாக வாதிட்டனர். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட கொல்கத்தா நீதிமன்றம் அமைச்சர் புபனேஷ்வர் எய்ம்ஸுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டது.

பரிசோதனை
கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும், அவருடன் அவரது வழக்கறிஞரும் தனியார் மருத்துவமனை மருத்துவரும் இருப்பார்கள் என்றும் நீதிமன்றம் கூறியது. எய்ம்ஸ் புவனேஸ்வர் மருத்துவ வல்லுநர்கள் அமைச்சருக்கு பூரண மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

விசாரணை
திங்கள்கிழமை (ஜூலை 25) பிற்பகல் 3 மணிக்குள் அமைச்சரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை வழக்கின் விசாரணை அதிகாரி, தனியார் மருத்துவ அதிகாரி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு எய்ம்ஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கைச் சிறப்பு நீதிபதி திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு விசாரிப்பார் என்றும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications