இணையத்தில் பொய் செய்தி பரப்பினால் 10 வருட ஜெயில் அல்லது கடும் அபராதம்.. சிங்கப்பூரில் அதிரடி
சிங்கப்பூர்: பொய்யான தகவல்கள், புரளிகள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 கோடியே 12 லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.

சமூகவலைதளங்களில் கிளம்பும் புரளிகளை கட்டுப்படுத்தவே இந்த அதிரடி சட்டத்தை சிங்கப்பூர் அரசு கையில் எடுத்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நாட்டு சட்ட உள்துறை அமைச்சர் சண்முகம், இணையத்தில் உலா வரும் வதந்திகள் உண்மையை தகர்த்தெறிவதாக குறிப்பிட்டார். சமூக வலைதளங்கள் மூலம் பொய் செய்திகளைப் மூன்று பிரிவினர் தான் பரப்பி வருகின்றனர்.
சைபர் அட்டாக் நடத்த விரும்பும் நாடுகள், வர்த்தக ரீதியில் லாபம் நாடுவோர், அரசியல் லாபத்திற்காகவே மாற்று சமூகத்தினரைத் தாக்க வீண் புரளிகளை பரப்புவோர் என பட்டியலிட்டுள்ளார். மத்திய கிழக்கை சேர்ந்த மூன்று ஆண்களால் தாக்கப்பட்டதாக ஜெர்மனியில் பெண் ஒருவர் பொய் செய்தி வெளியிட்டதை சிங்கப்பூர் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சொந்த விருப்பு வெறுப்பிற்காக சிலர் வேண்டுமென்றே பரப்பும் வதந்திகள் சொந்த நாட்டை மட்டுமின்றி, பிற நாடுகளையும் பாதிப்பதாக கவலை தெரிவித்தார். எனவே தான் அதனை முற்றிலும் ஒடுக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை சட்டரீதியாக எதிர்கொள்ள புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதே போல பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டம் பேச்சுரிமையைப் பாதிக்காது. மாறாக பொய் செய்திகளை பரப்புவோர்கள் நிச்சயம் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.
ஒரு செய்தியை வதந்தி என அரசு முடிவெடுத்து ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், அரசின் முடிவை எதிர்த்து தாராளமாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications