சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 10,000-த்தை தாண்டியது- ஒரே நாளில் 1,016 பேருக்கு நோய் தொற்று உறுதி
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று மேலும் 1016 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூரில்தான் கொரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கும் இடங்களில்தான் கொரோனா அதிகமாக பரவி வருகிறது.
இதனால் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிங்கப்பூரில் கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் லாக்டவுன் ஜூன் 1-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் இன்று மேலும் 1016 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிங்கப்பூரில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,141 ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் 3-வது நாளாக 1,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.