போதைப் பொருள் வழக்கு: சிங்கப்பூரில் மலேசிய தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டார்!
சிங்கப்பூர்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த மலேசிய தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் சிங்கப்பூரில் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். பின்னர் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் ஈப்போ நகரத்துக்கு நாகேந்திரன் தர்மலிங்கம் உடல் கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் டயாமார்ஃபைன் என்ற தடை செய்யப்பட்ட பொருளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். டயாமர்ஃபைன் பொருள் மூலமாக போதைப் பொருள் தயாரிக்க முடியும். அதேநேரத்தில் இது புற்றுநோயால் ஏற்படும் வலிக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சிங்கப்பூரில் இப்பொருள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்பொருளை நாகேந்திரன் தமது தொடைப்பகுதியில் உறை ஒன்றில் கட்டி சிங்கப்பூருக்கு கடத்தி வந்தார் என்பது வழக்கு. இவ்வழக்கில் நாகேந்திரன் தர்மலிங்கம் குற்றவாளி என 2019-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்.
ஆனால் நாகேந்திரன் தர்மலிங்கம் நுண்ணறிவு குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி; அதனால் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்கள் நாகேந்திரன் தர்மலிங்கம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இந்த முயற்சிகள் கைகூடவில்லை. மலேசிய பிரதமர், மாமன்னர் ஆகியோரும் கூட நாகேந்திரனுக்கு கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் சட்டப்பூர்வ நடைமுறைகள் நிறைவடைந்து போயின. இதனையடுத்து இன்று காலை சிங்கப்பூரில் நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டார்.
இதனையடுத்து நாகேந்திரன் தர்மலிங்கத்தின் உடலுடன் மலேசியாவின் ஈப்போ நகருக்கு அவரது உறவினர்கள் சென்றடைந்தனர். ஈப்போ நகரில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நாகேந்திரன் தர்மலிங்கம் உடலுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு இனத்தவரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.