மீண்டும் அடிக்கும் கொரோனா அலை? ஆசியாவில் உயிரிழப்பும் அதிகரிப்பதால் மக்கள் அச்சம்! என்ன காரணம்?
சிங்கப்பூர்: இப்போது திடீரென ஆசியாவில் பல இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளும் கூட கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இதனால் இன்னொரு கொரோனா அலை ஏற்படுமா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆசியாவின் பல முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019 இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் நம்மை ஒரு வழி செய்துவிட்டது. அலை அலையாகத் தாக்கிய கொரோனாவில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் ஆனது. கொரோனா வேக்சின், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனாவை நம்மால் சமாளிக்க முடிந்தது.

கொரோனா வைரஸ்
இதற்கிடையே இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. ஆசியாவின் இரு முக்கிய நகரங்களான ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா அவ்வப்போது அதிகரிக்கிறது என்ற போதிலும், இந்த முறை தீவிர பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆவதும் அதிகரித்துள்ளது. அதுவே பலருக்கும் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
மேலும், பொதுவாக இதுபோன்ற வைரஸ்கள் குளிர் அல்லது மழைக் காலத்தில் தான் வேகமாகப் பரவும்.. வெப்பமான காலகங்களில் குறைவாகவே பரவும் எனக் கருதப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக இப்போது வெப்பமான காலகட்டத்தில் வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவுகிறது. இது ஆய்வாளர்களுக்குமே கூட சற்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
ஹாங்காங் கொரோனா
இதில் ஹாங்காங்கில் கொரோனா பரவல் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைரஸ் ஆக்டிவாக இருப்பதாகவும் இதனால் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஹாங்காங் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ஆல்பர்ட் கூறியிருக்கிறார். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் கூட கணிசமாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் அங்குக் கழிவுநீரிலும் கொரோனா வைரஸ்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. சுமார் 70 லட்சம் பேர் வாழும் நகரமாக ஹாங்காங் இருக்கும் சூழலில், கழிவுநீரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுவது அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஏனென்றால் மீண்டும் சமூக பரவலாக கொரோனா பரவினால் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
சிங்கப்பூர் பாதிப்பு
அதேபோல ஆசியாவின் மற்றொரு முக்கிய நகரமான சிங்கப்பூரிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஓராண்டில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அங்கு அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில் சுமார் 14,200 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு வாரத்தில் 28% கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. அதேபோல மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதும் சுமார் 30% வரை உயர்ந்துள்ளது. இதனால் வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் மீண்டும் பூஸ்டர் வேக்சின் போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்ன காரணம்
முந்தைய காலங்களில் புதிய கொரோனா வேரியண்ட் உருவாகும்போதே கொரோனா பரவல் இதுபோல உயரும். ஆனால், இந்த முறை அப்படி இல்லையாம். புதிதாக கொரோனா எதுவும் இல்லாமலேயே கொரோனா அதிகரித்துள்ளது. மக்களிடையே தடுப்பாற்றல் குறைவதே கொரோனா ஈஸியாக பரவ அனுமதித்துள்ளதாகச் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், ஹாங்காங் மட்டுமின்றி தைவான், சீனா, தாய்லாந்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் எங்கு மற்றொரு கொரோனா அலை ஏற்படுமோ.. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications