கீழே கிடந்த மாங்காயை எடுத்தது ஒரு குத்தமா! சிங்கப்பூரில் 3.7 லட்சம் அபராதம்! கதறும் இந்தியர்கள்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் என்றாலே கண்டிப்பான சட்டங்களுக்குப் பெயர் போன நாடு என்பது நமக்குத் தெரியும். ஆனால், அங்கே சாலையில் விழுந்து கிடக்கும் ஒரு மாம்பழத்தைத் தொட்டால் கூட நம் பாக்கெட்டில் இருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் 'காலி' ஆகும் என்பது பலருக்குப் புதிய தகவல். சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண் அங்குக் கீழே கிடக்கும் மாம்பழத்தைத் தொட்டால் எவ்வளவு பெரிய தொகையை அபராதமாகக் கட்ட வேண்டி இருக்கும் என்பது குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் சாலையோர மரங்களில் மாம்பழமோ, புளியம்பழமோ விழுந்து கிடந்தால், அதை எடுப்பது வழக்கமான நடைமுறை தான். அதுபோல கிடைக்கும் பழங்களுக்குச் சுவை அதிகம் என்று கூட பேச்சு வழக்கில் சொல்வார்கள். ஆனால், சிங்கப்பூரில் அப்படி இல்லை. கீழே கிடந்த மாம்பழத்தை எடுத்தால் கூட மாட்டிக் கொள்வோம்.

மாம்பழம்
இது போலக் கீழே கிடந்த மாம்பழத்தை எடுத்தால் ₹3.5 லட்சம் (5,000 சிங்கப்பூர் டாலர்) அபராதம் செலுத்த வேண்டுமாம்.. சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சின்ஹா என்பவரே இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சிங்கப்பூரின் தேசிய மேம்பாட்டு அமைச்சகத்தின் விதிகளின்படி, பொது இடங்களில் நடப்பட்டுள்ள மரங்கள் மற்றும் அதில் காய்க்கும் பழங்கள் என அனைத்தும் அந்த நாட்டு அரசுக்குச் சொந்தம்.
பெரிய தண்டனை
எனவே, பொதுப் பூங்காக்களில் அனுமதி இல்லாமல் பழங்களைப் பறிப்பதோ அல்லது கீழே விழுந்து கிடக்கும் பழங்களைச் சேகரிப்பதோ அந்நாட்டின் பூங்காக்கள் மற்றும் மரங்கள் சட்டத்தின்படி குற்றம். இதற்கு அதிகபட்சமாக 5,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படலாம். சாதாரணப் பூங்காக்களுக்கே இந்த நிலை என்றால், தேசியப் பூங்காக்கள் அல்லது வனக் காப்பகப் பகுதிகளில் இதுபோல எதாவது செய்தால் நிலைமை இன்னும் மோசம். அங்குப் பழங்களை எடுத்தால் 50,000 சிங்கப்பூர் டாலர் (சுமார் ₹35 லட்சம்) வரை அபராதமும், அதோடு சேர்த்து 6 மாதச் சிறைத் தண்டனையும் கூட கிடைக்க வாய்ப்புள்ளது.
நெட்டிசன்கள் கதறல்
இது குறித்து விளக்கி பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட்டை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், ""எங்க ஊர்ல கல்லு விட்டு அடிப்போம், ஆனால் இங்கே தொட்டாலே லட்சக்கணக்குல ஃபைன் போடுறாங்களே!" என பதிவிட்டுள்ளார்.
"என்னுடைய இந்தியாவே சிறந்தது!" எனச் சிலர் பெருமிதப்பட.. இன்னும் சிலரோ, "நமது செல்லப் பிராணிகள் அந்தப் பழத்தை எடுத்தால் என்னவாகும்?" என வினோதமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால், அதற்கும் சிங்கப்பூர் சட்டம் பதில் வைத்திருக்கிறது. உங்களின் செல்லப் பிராணி செய்யும் செயலுக்கும் உரிமையாளரான நீங்களே பொறுப்பு என்று ஸ்ட்ரிக்ட் ஆபீசராக இருக்கிறது சிங்கப்பூர்!
கடுமையான சட்டங்கள்
சிங்கப்பூர் இவ்வளவு சுத்தமாகவும், ஒழுக்கமாகவும் இருப்பதற்குக் காரணம் இதுபோன்ற கிடுக்கிப்பிடி சட்டங்கள்தான். சாலையில் எச்சில் துப்புவது, குப்பை போடுவது போலப் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதையும் அங்கே மிக பெரிய குற்றமாகக் கருதுகிறார்கள். மாம்பழம்தானே என்று நாம் சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயம், அங்கே பொது ஒழுக்கத்தின் குறியீடு. ஒருவேளை இந்தியாவிலும் இதுபோன்ற சட்டங்கள் இருந்தால், நம் ஊர் சாலைகளும் சிங்கப்பூர் போல மாறலாம்!












Click it and Unblock the Notifications