சிங்கப்பூரில் உரிய உரிமம் இல்லாமல் பணி செய்தவருக்கு நேர்ந்த சம்பவம்! அரசை ஏமாற்றினால் இதுதான் தண்டனை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அனுமதி உரிமம் இல்லாமல் வேலை பார்த்தவருக்கு அந்நாட்டு அரசு கடுமையான தண்டனை விதித்திருக்கிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பலர் சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் நிலையில், இந்த தண்டனை பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவை விட சிங்கப்பூர் மிகவும் வலிமையான பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சிங்கப்பூரை விட முன்னாடி இருந்தாலும், சிங்கப்பூரின் பொருளாதாரம் நிலையானதாக இருக்கிறது. எனவே அங்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாக்கப்படுகின்றன. அதேபோல சொந்த நாட்டு மக்களுக்கு கொடுக்கும் ஊதியத்தில் ஒரு பகுதியை கொடுத்தாலே, வேலை செய்வதற்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காக சிங்கப்பூர் செல்லும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அந்நாட்டில் வேலை செய்ய வேண்டும் எனில் அதற்கான உரிய அனுமதி லைசன்ஸ்/பாஸ் பெற்றிருக்க வேண்டும். அது இல்லாமல் வேலை செய்யும் பட்சத்தில் தண்டனைகள் கடுமையாக இருக்கும். அப்படித்தான் டாக்டர் குவெக் கியான் கெங் எனும் மருத்துவர் சிங்கப்பூரில் கடுமையான தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார்.
இவர் கடந்த 2009ம் ஆண்டு மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்திருக்கிறார். அதன் பின்னர் மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனையில் உள்ள KK Queck நரம்பியல் மையத்தில் நரம்பியல் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். இதே மருத்துவமனையில் அவர் வேலை செய்து வருகிறார். ஆனால், இத்துடன் இல்லாமல், நம்மூரில் கிளினிக்கை திறப்பதை போல, அங்கும் சில கிளினிக்குகளை நடத்தி கோடிக்கணக்கில் காசு பார்த்திருக்கிறார். எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது. ஆனால், அரசு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அவர் சிக்கிக்கொண்டார்.
சிங்கப்பூர் நாட்டின் சட்டப்படி உரிய அனுமதியில்லாமல் இப்படி வேலை பார்த்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு 50,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.31 லட்சத்திற்கு சமம். இவர் ஏற்கெனவே இதுபோன்று உரிமம் இல்லாமல் வேலை பார்த்து சிக்கியிருக்கிறார். அப்போது ரூ.40 லட்சம் வரை அபராதம் விதித்திருக்கிறார்கள். ஆனால், அடங்காமல் அதே தவறை செய்து தற்போது மீண்டும் வசமாக சிக்கியிருக்கிறார்.
எனவே சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், அந்நாட்டின் சட்ட திட்டங்களை ஓரளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல அங்கு வேலை செய்வதற்கான உரிய அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications